ஆந்திராவில் பட்டாசு தொழிற்சாலையில் வெடிவிபத்து: 2 பேர் பலி – 11 பேர் காயம்..!!
ஆந்திர மாநிலம் நெல்லூர் புறநகர்ப்பகுதியான போர்லுகட்டாவில் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு இன்று காலையில் வழக்கம்போல் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆலையின் ஒரு பகுதியில் உள்ள பட்டாசுகள் திடீரென வெடித்துச் சிதற ஆரம்பித்தன.
இதனால் தொழிலாளர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினர். இருப்பினும் பலர் பட்டாசு புகை மூட்டத்தில் சிக்கிக்கொண்டு வெளியேற முடியாமல் தவித்தனர்.
தகவல் அறிந்த போலீசார், தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து பட்டாசு ஆலையில் பற்றி எரிந்த தீயை கட்டுப்படுத்த மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த வெடிவிபத்தில் 2 பேர் உயிரிழந்ததாகவும், 11 பேர் தீக்காயமடைந்து மீட்கப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
இந்த விபத்து குறித்து உரிய விசாரணை நடத்தி உடனடியாக அறிக்கை தாக்கல் செய்யும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு துணை முதல்வர் உத்தவிட்டுள்ளார். மேலும், சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலைகள் ஏதாவது செயல்பட்டால் அவற்றை மூடும்படி மாவட்ட நிர்வாகத்திற்கும் உத்தரவிட்டார்.
Average Rating