இந்தோனேசியா: படகு தீவிபத்தில் 23 பேர் பலி ..!!
இந்தோனேசியா கடல் பகுதியில் இன்று தீவிபத்தில் சிக்கிய படகில் சென்ற 23 பேர் பலியாகினர். நூற்றுக்கும் அதிகமானவர்கள் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் காணாமல்போன 17 பேரை தேடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்தோனேசியா நாட்டில் அதிகமான சாலை வசதிகள் இல்லாததால் அந்நாட்டின் பல பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஆற்றுப்பகுதிகளை கடந்துச் செல்ல படகு போக்குவரத்தையே பெரும்பாலும் நம்பியுள்ளனர்.
சில பகுதிகளில் மக்கள்தொகைக்கு ஏற்ப படகுகளின் எண்ணிக்கை இல்லாததால் பணத்துக்கு ஆசைப்பட்டு, அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான பயணிகளை படகோட்டிகள் ஏற்றிச் செல்கின்றனர்.
பொதுமக்களும் இதில் உள்ள ஆபத்தைப்பற்றி கவலைப்படாமல், எப்படியாவது அக்கரைக்கு போய் சேர்ந்தால் போதும் என்ற அவசரத்தில் இதுபோன்ற படகுகளில் ஏறி, தங்களது உயிருக்கு உலை வைத்துக் கொள்கின்றனர்.
இந்நிலையில், தலைநகர் ஜகர்தாவின் வடபகுதியில் உள்ள முவாரே ஆங்கே துறைமுகத்தில் இருந்து இன்றுகாலை சுமார் 200 பயணிகளை ஏற்றியபடி ஒரு இயந்திரப் படகு ஆயிரம் தீவுகள் பகுதிக்கு சென்றது.
புறப்பட்ட சிறிது நேரத்தில் அந்தப் படகின் என்ஜின் பகுதியில் இருந்து கிளம்பிய தீப்பிழம்பு, படகு முழுவதும் பரவியது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகளில் பலர் உயிர்பயத்தில் கடலுக்குள் குதித்து தப்பிப் பிழைத்தனர். எனினும், வேகமாக பரவிய தீயில் சிக்கி 23 பேர் உடல்கருகி உயிரிழந்தனர்,
தகவல் அறிந்து விரைந்து வந்த கடலோரக் காவல் படையினர் கடலில் நீந்தியபடி உயிருக்குப் போராடிய நூற்றுக்கும் அதிகமானவர்களை பத்திரமாக மீட்டனர். காணாமல்போன 17 பேரை தேடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
Average Rating