போதையில் பெற்றோரை கட்டிப் போட்டு சித்ரவதை செய்த வாலிபர்..!!
தேனி மாவட்டம் பெரியகுளம் ஸ்டேட் பாங்க் காலனியைச் சேர்ந்தவர் மணிக்கட்டி (வயது 52). இவரது மனைவி ஈஸ்வரி (50). இருவரும் கூலித் தொழிலாளர்கள். இவர்களது மகன் கார்த்திக் ராஜா (19). குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர்.
அடிக்கடி தனது பெற்றேரிடம் பணம் வாங்கி மது குடித்து வந்துள்ளார். பணம் தரவில்லை என்றால் அவர்களை அடித்து சித்ரவதை செய்துள்ளார். நேற்று மது குடிக்க பணம் தராததால் ஆத்திரமடைந்த கார்த்திக் ராஜா பெற்றோர் இருவரையும் கயிறால் கட்டிப்போட்டு வீட்டுக்குள் அடைத்து வைத்தார்.
அக்கம் பக்கத்தினர் இது குறித்து பெரியகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மணிக்கட்டி மற்றும் ஈஸ்வரி ஆகியோரின் கயிற்றை அவிழ்த்து விட்டனர்.
இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், கார்த்திக்ராஜா கடந்த 2 வருடங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்தார். திருமணம் செய்து கொள்வதாக உடலுறவும் கொண்டார். இந்த விபரம் இரு வீட்டாருக்கும் தெரிய வந்தது. மைனர் பெண்ணை கற்பழித்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டார்.
இதனால் கார்த்திக் ராஜாவை காதலித்த பெண் தற்கொலை செய்து கொண்டார். சிறையில் இருந்து வெளியே வந்த கார்த்திக் ராஜா தனது காதலி சாவுக்கு பெற்றோர்கள்தான் காரணம் என நினைத்து அவர்களை அடித்து துன்புறுத்தியுள்ளார். மேலும் அப்போது முதல் மது மற்றும் கஞ்சா பழக்கத்துக்கு அடிமையானார். அப்பகுதியில் உள்ள பொதுமக்களை வம்புக்கு இழுப்பது, ஆடு, மாடுகளை அவிழ்த்து விடுவது, டாஸ்மாக் பாரில் சென்று தகராறு செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டார்.
இவர் மீது 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறைக்கு சென்றாலும் அங்கிருப்பவர்களையும் மிரட்டி மன நிலை பாதிக்கப்பட்டவர் போல் நடந்து வந்தார். நேற்று பெற்றோரை கட்டிப்போட்டு சித்ரவதை செய்த சம்பவம் தெரிய வந்ததால் பொதுமக்கள் கார்த்திக் ராஜாவை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின் பேரில் தேனி கோடாங்கி பட்டியில் உள்ள மன நல காப்பகத்தில் கார்த்திக் ராஜா அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Average Rating