தீபாவுக்கு இளைய புரட்சித்தலைவி பட்டம் – திருச்சி கூட்டத்தில் முடிவு..!!
திருச்சியில் தீபா பேரவையின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன் தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர்கள் வெங்கட்ராஜ், ராஜ்குமார், குமார், ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட தீபா பேரவை ஒருங்கிணைப்பாளர் ஆனந்தன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தீபா பேரவை தொடங்குவது, தீபாவுக்கு இளைய புரட்சித்தலைவி என்ற பட்டம் சூட்டுவது உள்பட பல விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் உறுப்பினர் சேர்க்கையும் தொடங்கியது.
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்தில் தீபா ஆதரவாளர்கள் கூட்டம் பிடாரி அம்மன் கோவில் திடலில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு எம்.எஸ்.ஜகபர்அலி தலைமை தாங்கினார். வேப்பங்குடி பஞ்சு என்ற தங்கராசு, முத்துக்கருப்பன், பூவரசகுடி சின்னப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் முன்னாள் முதல்வரின் மறைவிற்குப் பிறகு ஏழை, எளிய நடுத்தர மக்களின் ஒட்டுமொத்த ஆதரவையும் ஜெயலலிதாவின் ரத்த வாரிசான ஜெ. தீபாவின் வழியில் திருவரங்குளம் வட்டார பகுதிகளில் உள்ள ஆதரவாளர்கள் செல்வது என முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் திருவரங்குளம் கிட்டக்காடு மெய்யர், இம்மனாம்பட்டி ஆறுமுகம், தேத்தாம்பட்டி ஆர்.மெய்யப்பன், நடுஇம்மனாம்பட்டி சுப்பையா, மனக்கொல்லைத் தோப்பு திருமேனி, கொத்தக்கோட்டை வடிவேல், வேப்பங்குடி முனியம்மாள் உள்பட 100-கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக பிடாரி அம்மன் கோவில் திடலில் இருந்து கடைவீதி வரை ஊர்வலம் நடைபெற்றது. கூட்டத்தில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.
Average Rating