சசிகலாவுடன் திரைப்படத்துறையினர் சந்திப்பு..!!
அ.தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
மக்கள் நெஞ்சங்களில் நீங்காது நிலைத்து நிற்கும் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் நூற்றாண்டை முன்னிட்டு, தமிழ்நாடு திரைப்படத்துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகள் குறித்து, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவை 12-1-2017 அன்று (நேற்று), திரைப்பட இயக்குனர்களான பி.பாரதிராஜா, கே.பாக்யராஜ்;
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத் தலைவர் விக்ரமன், பொதுச் செயலாளர் ஆர்.கே.செல்வமணி, இணைச் செயலாளர் லிங்குசாமி, செயற்குழு உறுப்பினர்களான மனோஜ்குமார், ரமேஷ் கண்ணா, சி.ரங்கநாதன்; தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத் தலைவர் நாசர்; தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, துணைத் தலைவர் கதிரேசன்; தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் கட்ரகட பிரஜாத்; சென்னை மாநகர திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன்; தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பன்னீர்செல்வம், முருகேசன்; சென்னை- செங்கல்பட்டு-திருவள்ளூர் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் அருள்பதி, சாகுல் அமீது, பிரசாத், வெங்கட்; தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத் தலைவர் சிவா, செயலாளர் செல்வராஜ், பொருளாளர் சந்திரன்; தென்னிந்திய இசைக் கலைஞர்கள் சங்கத் தலைவர் எஸ்.ஏ.ராஜ்குமார்; திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு சங்கத் தலைவர் செல்வின் ராஜ் மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி டைமண்ட் பாபு உள்ளிட்ட அனைத்து சங்கங்களின் நிர்வாகிகளும் நேரில் சந்தித்தனர்.
அப்போது, தமிழ்நாடு திரைப்படத்துறையின் சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் நூற்றாண்டையொட்டி, ஆண்டு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருப்பதாகத் தெரிவித்து, முதல் நிகழ்ச்சியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா கலந்துகொண்டு துவக்கி வைத்து சிறப்பிக்குமாறு தமிழ்நாடு திரைப்படத் துறையைச் சேர்ந்த அனைத்து சங்கங்களின் நிர்வாகிகளும் அழைப்பு விடுத்தனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை வருகிற 17-ந்தேதி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைக்க இருப்பதாக திரைப்படத்துறையினர் நிருபர்களிடம் தெரிவித்தனர்.
Average Rating