மெரினாவில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள்: விடிய விடிய போராட்டம் தொடரும் என அறிவிப்பு..!!
மதுரை அலங்காநல்லூரில் சுப்ரீம் கோர்ட்டு தடையை மீறி பல இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டன. இந்த ஜல்லிக்கட்டு நடத்தியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். காளை மாடுகளை பறிமுதல் செய்தனர். தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்திய இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் காட்டு தீ போல பரவியது. கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். தடியடி நடத்திய போலீசார் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழக முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் சமூக வலைத்தளம் மூலம் இந்த போராட்டம் குறித்து அறிவிப்பு வெளியிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் நேற்று காலை 9.30 மணியளவில் சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்றுக் கூடினர்.
விவேகானந்தர் இல்லம் எதிரே மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் இந்த இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமான பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர வேண்டும்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கையில், ’ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்காத தமிழக எம்.பி.க்கள் 39 பேரும் ராஜினாமா செய்ய வேண்டும்’. ’பீட்டா அமைப்பே நாட்டைவிட்டு வெளியேறு’. ’மாடுகள் எங்களது குழந்தைகள்’ உள்பட வாசகங்கள் அடங்கிய பாதகையை வைத்திருந்தனர்.
இதனையடுத்து, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினாவில் போராட்டம் நடத்தி வருபவர்களுடன் சென்னை மாநகர இணை ஆணையர் மனோகரன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில், சென்னை வருவாய் கோட்டாட்சியர் சிவருத்ரைய்யா உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இருப்பினும் பல கட்டங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்தவித பலனும் எட்டவில்லை. போராட்டத்தை கைவிடுமாறு போலீசார் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இருப்பினும் ஜல்லிக்கட்டுக்காக விடிய விடிய போராட்டம் நடத்தப்போவதாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் தமிழக முதல்வர் பதில் அளிக்கும் வரை இந்த போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
Average Rating