மர்ம காய்ச்சலுக்கு 2 சிறுமிகள் பலி: 33 குழந்தைகள் பாதிப்பு..!!
திருவண்ணாமலை அடுத்த தண்டராம்பட்டு வாழவச்சனூர் கிராமத்தில் மர்ம காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது.
குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை மர்ம காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர்.மர்ம காய்ச்சலால் பாதித்த அனைவரும் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் மர்ம காய்ச்சல் பாதித்த சாரணா (வயது 5), பானு (4) ஆகிய 2 சிறுமிகள் இறந்தனர். பலியான 2 சிறுமிகளும் வாழவச்சனூர் கிராமத்தை சேர்ந்தவர்கள். மேலும் பலருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வாழவச்சனூர் கிராமத்தில் மேலும் 33 குழந்தைகள் மர்ம காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். குழந்தைகள் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெறுகிறார்கள்.
மர்ம காய்ச்சலுக்கு 2 சிறுமிகள் பலியானதையடுத்து சுகாதார துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது. வாழவச்சனூர் கிராமத்தில் மருத்துவ குழுவினர் முகாமிட்டுள்ளனர்.
வீடு, வீடாக சென்று ரத்த பரிசோதனை, கொசு மருந்து தெளித்தல், தண்ணீர் தொட்டிகளை சுத்தம் செய்தல் என சுகாதார பணிகளை மேற்கொள்கிறார்கள்.
திருவண்ணாமலை அடுத்த தண்டரை கிராமத்தில் சமீபத்தில் மர்ம நோய் தாக்கி அடுத்தடுத்து 8 பேர் இறந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வாழவச்சனூர் கிராமத்தில் மர்ம காய்ச்சல் பரவியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating