சிலியில் கட்டுக்கடங்காமல் எரியும் காட்டுத் தீ: 11 பேர் உயிரிழப்பு..!!
தென் அமெரிக்க நாடான சிலி நாட்டில் கோடைக்காலத்தின்போது காடுகளில் தீப்பிடிப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால், கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்த ஆண்டு மிகப்பெரிய அளவில் காட்டுத் தீ பரவி வருகிறது.
சிலியின் தெற்கு, மத்தியப் பகுதிகளில் உள்ள காடுகளில் பரவி வரும் இந்த தீ, பல லட்சம் ஏக்கர் அளவிலான காடுகளை அழித்துள்ளது. ஆயிரக்கணக்கான தீயணைப்புப் படையினர், தன்னார்வ தீயணைப்பு வீரர்கள் மற்றும் தேசிய வனப்பகுதி பணியாளர்கள், போலீஸ் அதிகாரிகள் என முழு வீச்சில் தீயை கட்டுப்படுத்த போராடி வருகின்றனர்.
ஆனால், பல நாட்களாக முயன்றும் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் பிற நாடுகளிடம் உதவி கோரியது சிலி. இதனை ஏற்று கிட்டத்தட்ட 9 நாடுகள் உதவிக்குழுக்களை அனுப்பியுள்ளன.
இந்த விபத்தில் இதுவரையில் 5 தீயணைப்பு வீரர்கள் உள்பட 11 பேர் பலியாகி உள்ளனர். ஏராளமான வீடுகள் தீயில் கருகியுள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும், சில பகுதிகளில் வீடுகள் தீப்பிடிக்கும் அபாயம் உள்ளது.
இந்நிலையில், தீயணைப்பு பணியில் உதவி செய்வதற்காக ரஷ்யாவில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விமானத்தில் வந்தனர். தண்ணீர் நிரப்பப்பட்ட விமானத்தில் வந்த இவர்கள், முதலில் மரங்கள் அதிகம் உள்ள போர்ட்சுவேலோ நகரை சுற்றி தண்ணீரை பீய்ச்சியடித்தனர்.
இதற்கிடையே வேண்டும் என்றே மரங்களுக்கு தீ வைத்ததாகவும், இதனால் காட்டுத் தீ பரவியதாகவும் கூறப்படுகிறது. இதற்காக பலரை அந்நாட்டு அரசு கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Average Rating