ரோஹிங்யா முஸ்லீம்கள் மீது ராணுவ நடவடிக்கையால் 100 பேர் பலி..!!
புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மியான்மர் நாட்டின் வடக்கே உள்ள ரக்கினே பகுதியில் ரோஹிங்யா இன முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். மியான்மரில் பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகையை கொண்டவர்களாக இருக்கும் இவர்களில் சிலர், அரசுக்கு எதிராக 2012-ம் ஆண்டில் இருந்து ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராணுவத்தினருக்கும் அவர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் நிகழ்ந்து வந்தது. இந்த மோதலில் முஸ்லீம்கள் அதிகமாக பாதிக்கப்பட்டதால் ஏராளமானோர் அண்டை நாடான வங்காளதேசத்தில் அகதிகளாக தஞ்சம் புகுந்தனர்.
கடந்த அக்டோபர் மாதம் முதல் ரக்கினே பகுதியிலிருந்து ரோஹிங்யா முஸ்லீம்களை அப்புறப்படுத்தும் பணியில் மியான்மர் ராணுவத்தினர் ஈடுபட்டுவருகின்றனர். இந்த நடவடிக்கையின் போது மனித உரிமைகள் பெருமளவில் மீறப்படுவதாகவும், ராணுவம் இனஅழிப்பில் ஈடுபடுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில், மியான்மர் ராணுவத்தினரின் நடவடிக்கையில் சுமார் 100-க்கும் மேற்பட்ட முஸ்லீம் மக்கள் உயிரிழந்திருக்கலாம் என ஐ.நா.சபை அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், பெண்கள் பாலியல் சித்திரவதைக்கு உள்ளானதாகவும், பலியானவர்களில் கணிசமான குழந்தைகளும் அடக்கம் எனவும் அந்த அறிக்கையில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
ஐ.நா சபையின் மனித உரிமை ஆணையத்தைச் சேர்ந்த ஷீயிட் பின் ராத், மியான்மர் ராணுவத்தின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், ராணுவ நடவடிக்கை குறித்து மியான்மர் அரசுக்கு பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளனர். மியான்மர் அரசு உடனடியாக ராணுவத்தின், மனித உரிமை மீறல் குறித்து உரிய விசாரணை நடத்திட வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
நோபல் பரிசு பெற்ற ஆங் சாங் சூகி தலைமையில் மியான்மர் அரசு செயல்பட்டு வருகிறது. சிறுபான்மையினர் மீது அதிக கவனம் செலுத்துமாறு சர்வதேச நாடுகள் தொடர்ந்து மியான்மர் அரசை வற்புறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Average Rating