பெய்ரூட்டில் கோபி அன்னான்
இஸ்ரேலுக்கும் லெபனானிய கிளர்ச்சிக்குழுவான ஹெஸ்பொல்லா அமைப்பினருக்கும் இடையிலான ஒரு மாதகாலத்துக்கும் அதிகமாக இடம்பெற்ற சண்டையை முடிவுக்கு கொண்டுவந்த போர் நிறுத்தத்துக்கு, ஊக்கம் தரும் முயற்சியாக ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலர் கோபி அன்னான் அவர்கள், லெபனானின் தலைநகர் பெய்ரூட்டுக்கு சென்றுள்ளார்.
லெபனானின் பிரதமர் பௌட் சினியோரா மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர் நபியா பெரி ஆகியோருடன் பேச்சுவாத்தை நடத்துவதற்கு முன்னதாக உரையாற்றிய கோபி அன்னான் அவர்கள், இது லெபனானுக்கு மிகவும் முக்கியமான தருணம் என்றும், அனைத்து தரப்பினரும் தமக்கு ஏற்படக்கூடிய இழப்புகளையும் தாண்டிய சமரசங்களை செய்தாக வேண்டும் என்றும் கூறினார்.
லெபனானின் முக்கிய நிபந்தனைகளில் ஒன்றாக, இஸ்ரேல் தமது நாட்டின் துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் மீதான தடையை நீக்க வேண்டும் என்பது திகழுகிறது.
ஹெஸ்பொல்லா அமைப்பு மீண்டும் ஆயுதந்தரிக்கக் கூடாது என்ற உத்தரவாதத்தை இஸ்ரேல் எதிர்பார்க்கிறது.
சிரியாவுடனான தமது எல்லையில் ஐக்கிய நாடுகள் படை ரோந்தில் ஈடுபட வேண்டுமென்றும் இஸ்ரேல் கேட்கிறது; லெபனான் வேண்டுகோள் விடுத்தால் மாத்திரமே இது சாத்தியம் என்று கோபி அன்னான் கூறுகிறார்.