விஜய் மில்டனின் ‘கடுகு’ படத்துக்கு சூர்யா செய்த உதவி..!!
கோலி சோடா’ என்ற படத்தை இயக்கி வெற்றிக்கொடி நாட்டிய ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன், தற்போது தேவயானியின் கணவரான இயக்குனர் ராஜகுமாரனை ஹீரோவாக வைத்து ‘கடுகு’ என்ற படத்தை இயக்கி வந்தார். இப்படத்தில் நடிகர் பரத்தும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தை விஜய் மில்டனின் ‘ரஃப் நோட் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். எஸ்.என்.அருணகிரி இசையமைத்துள்ள இப்படத்துக்கு விஜய் மில்டனே ஒளிப்பதிவை கவனித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.
அனைத்து வேலைகளும் முடிவடைந்துவிட்டாலும், படம் வியாபாரம் ஆகாமலேயே இருந்து வந்தது. அதனால், சொந்தமாக ரிலீஸ் செய்ய முடிவு செய்த விஜய் மில்டனுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் ‘கடுகு’ படத்திற்கு ஆதரவு கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், சமீபத்தில் சூர்யாவை சந்தித்த விஜய் மில்டன், தன்னுடைய ‘கடுகு’ படத்தை வெளியிட முன்வருமாறு அவரை கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, தமிழகத்தில் ‘கடுகு’ படத்தை தன்னுடைய ‘2டி என்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் மூலம் சூர்யா வெளியிட முன்வந்துள்ளார். இதுவரை தயாரிப்பு பணியில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த சூர்யா, முதன்முதலாக ‘கடுகு’ படத்தின் மூலம் விநியோகஸ்த உரிமையை வாங்கி வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating