திருவையாறு அருகே மனைவியை வெட்டி கொன்று தூக்கில் தொங்க விட்ட கணவர்..!!
தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள திருவாலம்பொழில் தெற்கு ஆதி திராவிடர் தெருவை சேர்ந்தவர் ரமணி. கூலித்தொழிலாளி. இவரது மனைவி ராஜேஸ்வரி (23).
இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. 3 வயதில் ரக்ஷனா என்ற பெண் குழந்தை உள்ளது. ரமணி தினமும் குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்றும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த ரமணி அரிவாளால் மனைவி ராஜேஸ்வரியின் தலையில் வெட்டினார். இதில் அவர் பரிதாபமாக இறந்தார். பின்னர் பிணத்தை தூக்கில் தொங்க விட்டு தப்பி ஓடி விட்டார்.
ராஜேஸ்வரியின் குழந்தை ரக்ஷனாவை பக்கத்து வீட்டில் வசித்து வரும் சித்ரா வைத்திருந்தார். குழந்தை அழுததால் அதனை வீட்டில் விடுவதற்காக வந்த போது கதவு தாழ்பாள் போடப்பட்டு இருந்தது. கதவை தள்ளி திறந்த போது ராஜேஸ்வரி தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டார்.
உடனே அருகில் இருந்தவர்கள் நடுக்காவிரி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் சிவராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ராஜேஸ்வரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலையாளி ரமணியை போலீசார் தேடி வருகிறார்கள். ராஜேஸ்வரிக்கு திருமணமாகி 4 வருடமே ஆவதால் தஞ்சை கோட்டாட்சியர் விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. மனைவியை கணவர் வெட்டி கொன்ற சம்பவம் திருவையாறு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating