என் உயிருக்கு ஆபத்து: நடிகை ரோஜா கண்ணீர்..!!
ஆந்திரமாநிலம் விஜயவாடா அருகே பவித்ரா சங்கமத்தில் தேசிய பெண்கள் பாராளுமன்ற மாநாடு நடந்து வருகிறது. இதில் பங்கேற்க ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏவும் நடிகையுமான ரோஜா ஐதராபாத்தில் இருந்து விஜயவாடாவுக்கு விமானத்தில் சென்றார்.
விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். போலீசாரிடம் தனக்கு பெண்கள் பாராளுமன்ற மாநாட்டில் பங்கேற்க அழைப்பு வந்துள்ளது. அதற்காக செல்கிறேன் என்று ரோஜா கூறினார்.
அவரிடம் போலீசார் முக்கிய பிரமுகர் வரவிருப்பதால் நீங்கள் விடுதியில் ஒரு மணி நேரம் ஓய்வு எடுத்து செல்லுங்கள் என்று கூறினர். இதையடுத்து அவரை போலீசார் தங்கள் வாகனத்தில் ஏற்றி அழைத்து சென்றனர்.
ஆனால் விடுதிக்கு அழைத்து செல்லாமல் ஐதராபாத் நோக்கி போலீஸ் வாகனம் சென்றது. இதனால் சந்தேகம் அடைந்த ரோஜா தனது செல்போனில் இருந்து டி.வி. சேனல்களுக்கு தான் கடத்தப்படுவதாக சந்தேகப்படுகிறேன் என்று தகவல் அனுப்பினார். வீடியோவில் பேசி பதிவு செய்தும் அனுப்பினார். இது ஆந்திர டி.வி. சேனல்களில் ஒளிபரப்பானது. இதற்கிடையே குண்டூர் அருகே பெரே செல்லா என்ற இடத்தில் போலீஸ் வாகனத்தில் இருந்து ரோஜா குதித்து கிராம மக்களை நோக்கி ஓடினார் உடனே அவரை போலீசார் விரட்டி பிடித்து காரில் வலுகட்டாயமாக ஏற்றி சென்றனர்.
அவரை ஐதராபாத் மணிகொண்டாவில் உள்ள வீட்டில் இறக்கிவிட்டனர். அதன்பின் ரோஜா ஒய்.எஸ். ஆர் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தெலுங்குதேசம் கட்சியில் இருந்து சந்திரபாபு நாயுடுக்காக 15 ஆண்டுகள் உழைத்தேன். 2 முறை தேர்தலில் நிற்க வைத்து தெலுங்கு தேசம் கட்சியினரே என்னை தோற்கடித்தனர்.
அதன்பிறகு ஒய்.எஸ்.ஆர் கட்சியில் சேர்ந்து எம்.எல்.ஏ ஆனேன் என் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காட்டுகிறார்கள். பெண்கள் பாராளுமன்ற மாநாட்டில் என்னை பங்கேற்கவிடாமல் தடுத்து விட்டனர்.
இது பற்றி டி.ஜி.பியிடம் கேட்டால், நான் மாநாட்டில் பிரச்சினை ஏற்படுத்துவதற்காக செல்வதாக தகவல் வந்துள்ளது. அதனால் தான் கைது செய்து ஐதராபாத்துக்கு திருப்பி அனுப்புகிறோம். அரசாங்கத்துக்கு எதிராக எதுவும் பேச மாட்டேன் என்று எழுதி கொடுத்தால் அது பற்றி யோசிப்பேன் என்று கூறுகிறார். சந்திரபாபு நாயுடு ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.
என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக பயப்படுகிறேன். எனக்கு ஏதாவது நேர்ந்து விட்டால் எனது குழந்தைகளை பற்றி கவலையாக இருக்கிறது என்றார். பேட்டியின் போது அவர் அழுதபடியே பேசினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
Average Rating