நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி வென்றதாக சபாநாயகர் அறிவிப்பு- எதிர்க்கட்சிகளே பங்கேற்கவில்லை..!! (வீடியோ)
தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சிகள் இல்லாமல் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். முதல்வராக பதவியேற்ற எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார்.
ஆனால் இதற்கு திமுக, காங்கிரஸ் மற்றும் ஓபிஎஸ் அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கூவத்தூர் சிறையில் இருந்து எம்.எல்.ஏக்களை கைதிகளைப் போல நேரே சட்டசபைக்கு அழைத்து வந்து வாக்கெடுப்பு நடத்துவது சரியல்ல; அவர்களை தொகுதிகளுக்கு அனுப்பி வைத்துவிட்டு ஒருவாரம் கழித்து ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று திமுகவினர் வலியுறுத்தினர்.
இதனால் சட்டசபையில் பெரும் அமளி ஏற்பட்டது. சபாநாயகர் தனபால் இந்த அமளியை எதிர்கொள்ள முடியாமல் வெளியேறினார். 2 முறை ஒத்திவைப்பு இந்த அமளியால் முதலில் பிற்பகல் 1 மணி வரை சபை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டன. பின்னர் சபை கூடியபோதும் அமளி நீடித்ததால் 2-வது முறையாக 3 மணி வரை சபை ஒத்திவைக்கப்பட்டது.
திமுக எம்.எல்.ஏக்கள் மீது தாக்குதல் இதற்கு எதிர்ப்பு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டசபைக்குள் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார். இதையடுத்து ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் குண்டுகட்டாக சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அப்போது திமுக எம்.எல்.ஏக்கள் தாக்கப்பட்டனர்.
மு.க.ஸ்டாலினின் சட்டை கிழிக்கப்பட்டது. பின்னர் கிழிந்த சட்டையுடன் ஆளுநரிடம் புகார் தெரிவிக்க ஸ்டாலின் சென்றனர். பின்பு 3 மணிக்கு சட்டசபை மீண்டும் கூடியது. அப்போது காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
உடனடியாக பழனிச்சாமியின் தீர்மானத்தின் மீது சபாநாயகர் தனபால் தலைகளை எண்ணும் நடைமுறையின்படி வாக்கெடுப்பு நடத்தினார் சபாநாயகர். இதில் பழனிச்சாமிக்கு ஆதரவாக 122 எம்.எல்.ஏக்களும் எதிராக 11 எம்.எல்.ஏக்களும் வாக்களித்தனர். இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றதாக சபாநாயகர் அறிவித்தார். இதைத் தொடர்ந்து சட்டசபையை சபாநாயகர் ஒத்திவைத்தார்.
Average Rating