அசிடிட்டிக்கு நிரந்தர தீர்வு உண்டா..!!
எண்டோஸ்கோபி சிகிச்சையைப்பற்றிய கேள்விகளுக்கு கோவை என்.ஜி. மருத்துவமனையின் நிறுவனர் மற்றும் லேபராஸ்கோபி மற்றும் எண்டோஸ்கோபி சிகிச்சை நிபுணர் டாக்டர். மனோகரன் பதில் அளிக்கிறார்.
அசிடிட்டிக்கு நிரந்தர தீர்வு உள்ளதா?
அசிடிட்டிக்கு நிரந்தர தீர்வு உண்டு. உணவுப் பழக்கத்தை மாற்றியமைத்துக்கொள்வது சிறந்தது. அதாவது, அசிடிட்டிக்கான மருந்து மாத்திரைகளை சரியாக எடுத்துக்கொண்டு சரியான நேரத்தில் சரிவிகித உணவை எடுத்துக்கொண்டால் அசிடிட்டியிலிருந்து விடுபடலாம்.
காலையில் டீ சாப்பிட்டவுடன் பித்தவாந்தி வருகிறது.
பித்தநீர் குடலில் எதற்காக சுரக்கிறது?
பித்த வாந்தி என்று ஒன்று கிடையாது. பித்த நீரானது கல்லீரலில் சுரந்து பித்தநாளத்தின் வழியாக டியோடினம் என்னும் சிறுகுடலை சென்றடைந்து உணவை செரிப்பதற்கு கீழே வந்துவிடுகிறது. எனவே பித்தநீரானது மேலே வராது.
கல்லையும் செரிக்கிற வயது என்று சொல்லி அடிக்கடி சாப்பிட சொல்கிறார்களே இது சரியா?
இளம் வயதில் ஓடி ஆடுவதால் உடல் உழைப்பு அதிகமாக இருக்கும். எனவே எளிதில் ஜீரணமாகும். எனவே தான் அப்படி சொல்கிறார்கள். அதற்காக கல்லை சாப்பிட்டுவிடாதீர்கள்.
சமீபத்தில் மதுரையில் செயின் திருடிய பெண் ஒருவர் திருட்டை மறைக்க அதை விழுங்கி விட்டார் என செய்தி வெளியானது. உணவு குடலில் ஜீரணமாக முடியாத பொருட்கள் எத்தனை காலம் அங்கேயே தங்கியிருக்கும்?
எந்த ஒரு பொருளும் வயிற்றுக்குள் சென்றால் அது குறைந்தது 24 மணி நேரம், அதிகபட்சம் 48 மணி நேரத்தில் மலத்தின் வழியாக வெளியே வந்துவிடும்.
எனது 65 வயது தாய்க்கு சுகர், பிரஷர், ஹார்ட் பிராப்ளம் உள்ளது. திட உணவும் செரிமானம் ஆவதில்லை. பழச்சாறு சுகரை அதிகப்படுத்தும் என்கிறார் மருத்துவர். இனி எந்த வகையான உணவு கொடுக்கலாம்?
வேகவைத்த காய்கறிகள், காய்கறி சூப், பருப்பு, சப்பாத்தி போன்றவை கொடுக்கலாம். குறிப்பாக மண்ணிற்கு கீழே விளையும் கிழங்கு வகைகளை தவிர்க்க வேண்டும்.
கணையம், கல்லீரல் இவற்றின் பயன்பாடு என்ன?
கல்லீரலானது பித்த நீரை சுரந்து பித்த நாளங்கள் வழியாக டியோடினம் என்னும் சிறுகுடலுக்கு அனுப்பி உண்ணும் உணவை செரிக்க செய்ய உதவுகிறது. மேலும் நாம் உண்ணும் உணவிலுள்ள சத்தை உறிஞ்சி உடலின் மற்ற பாகங்களுக்கு அனுப்புகிறது. கணையமானது இன்சுலினை சுரந்து நம் உடலுக்குத்தேவையான சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைக்கிறது.
கர்ப்ப காலத்தில் விரைவில் உணவு செரிமானம் ஆகாததற்கு காரணம் என்ன?
கர்ப்ப காலத்தில் உணவு சாதாரணமாக செரிமானமாகும். ஆனால் உணவு முக்கால் வயிற்றுக்குத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். வயிற்றினுள் குழந்தை உள்ளதால் அதிகமாக உண்ணும்போது குடல் மேல் நோக்கித் தள்ளப்படும்.
Average Rating