பாகிஸ்தான் கோர்ட் வளாகத்தில் தற்கொலைப்படை தாக்குதல்: 7 பேர் உயிரிழப்பு..!!
பாகிஸ்தானில் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் அதிகம் உள்ள மாகாணம் கைபர் பாக்துன்க்வா மாகாணம். இங்கு அடிக்கடி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி அப்பாவி மக்களை கொன்று குவித்துவருகின்றனர். இந்நிலையில், தாங்கி நகரில் உள்ள செசன்ஸ் கோர்ட்டில் இன்று காலை வழக்கமான பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. வழக்கு தொடர்பாக கோர்ட்டுக்கு ஏராளமான மக்கள் வந்திருந்தனர்.
அப்போது, தற்கொலைப்படை தீவிரவாதிகள் கோர்ட்டுக்குள் ஊடுருவ முயன்றனர். துப்பாக்கிகளால் சுட்டும், வெடிகுண்டுகளை வீசியும் உள்ளே நுழைய முயன்ற அவர்களுக்கு பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்தனர். இதனால் கோர்ட் வளாகம் போர்க்களம்போல் காட்சியளித்தது.
சிறிது நேரம் நீடித்த இந்த சண்டையின்போது ஒரு தீவிரவாதி தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தான். இந்த மோதல் மற்றும் தற்கொலைப்படை தாக்குதலில் 7 பேர் பலியாகினர். 14 பேர் காயமடைந்தனர். போலீசாரின் துப்பாக்கி சூட்டில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தலிபான் தீவிரவாத அமைப்பின் ஒரு பிரிவான ஜமாத் உல் அஹ்ரர் பொறுப்பேற்றுள்ளது. கோர்ட் வாசலிலேயே தீவிரவாதிகள் தடுத்து நிறுத்தப்பட்டதால், உள்ளே இருந்த நீதிபதிகள், வழக்கறிஞர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
பாகிஸ்தான் முழுவதும் கடந்த சில தினங்களாக ராணுவ நடவடிக்கையில் 130க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Average Rating