பாலியல் முறைகேடு புகார்: ஐ.நா. ஊழியர் 17 பேர் அதிரடியாக டிஸ்மிஸ்
காங்கோ நாட்டில் அமைதிப் பணிகளுக்காக சென்ற இடத்தில் சிறுமிகளை பாலியல் ரீதியாக முறைகேடாகப் பயன்படுத்தியது தொடர்பாக 17 ஐ.நா. ஊழியர்கள் அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக, அமைதிப் பணியில் இருந்த 161 பேர் அவர்களது தாய்நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர் அல்லது வேறு பணிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என ஐ.நா. தெரிவித்துள்ளது.
காங்கோ நாட்டில் 13 வயதே நிரம்பிய சிறுமிகளை சிறிது உணவுக்காக பாலியல் ரீதியாக முறைகேடாகப் பயன்படுத்தியதாக ஐ.நா. ஊழியர்கள், படைவீரர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அமைதி காப்புப் பணியில் இருந்த 7 தளபதிகள் (கமாண்டர்கள்) உள்பட 206 ராணுவ வீரர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
அமைதி காப்புப் பணிக்கு படை வீரர்களை அனுப்பி உதவும் நாடுகளுடன் ஐ.நா. செய்துகொண்டுள்ள ஒப்பந்தப்படி, தவறு செய்த 144 ராணுவ வீரர்கள் அவரவர் தாய்நாட்டுக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இவர்கள் மீது அவரவர் நாட்டில் வழக்கு விசாரணை நடத்தி தண்டனை வழங்குமாறு ஐ.நா. கேட்டுக் கொண்டுள்ளது.