விமான ஓடுப்பாதையில் குறுக்கே வந்த நரி: நிகழ்ந்த விபரீத சம்பவம்..!!
சுவிட்சர்லாந்து நாட்டில் விமான ஓடுப்பாதையில் நரி ஒன்று எதிர்பாராத விதமாக குறுக்கே ஓடியதால் விமானம் பாதையை விட்டு விலகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸில் உள்ள சூரிச் விமான நிலையத்தில் தான் இந்த பரபரப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கடந்த சனிக்கிழமை காலை 11 மணியளவில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று சிங்கப்பூருக்கு புறப்பட தயாராக இருந்துள்ளது.
பயணிகள் அனைவரும் இருக்கைகளில் அமர்ந்ததும் விமானத்தை விமானி இயக்கியுள்ளார்.
சில மீற்றர்கள் தூரம் விமானம் சென்றவுடன் திடீரென கட்டுப்பாட்டு அறையில் இருந்து அவசர அழைப்பு வந்துள்ளது.
அப்போது, ‘ஓடுப்பாதையின் குறுக்கே நரி ஒன்று நடந்து செல்வதால் விமானத்தை உடனடியாக நிறுத்துங்கள்’ என உத்தரவிடப்பட்டது.
எதிர்பாராத இந்த தருணத்தில் விபத்தை தவிர்ப்பதற்காக விமானம் ஓடுப்பாதையை விட்டு விலகிச்சென்றுள்ளது. எனினும், பயணிகளுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை.
சில நிமிடங்களில் விமானம் புறப்பட்ட இடத்திற்கு திரும்பி வந்துள்ளது.
ஓடுப்பாதையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்த பிறகு சுமார் 18 நிமிடங்கள் தாமதமாக விமானம் மீண்டும் புறப்பட்டு சென்றது.
சூரிச் விமான நிலையத்தில் எதிர்பாராமல் நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பாக விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating