திருமணத்துக்கு பிறகும் சினிமாவில் நடிப்பேன்: சமந்தா..!!
சமந்தா தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். இவருடைய காதலர் நாக சைதன்யாவும் நடிப்பில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இவர்கள் திருமணம் விரைவில் நடைபெற இருக்கிறது. இது பற்றி சமந்தாவிடம் கேட்ட போது…
“நான் சினிமாவில் இந்த இடத்துக்கு வருவேன் என்று கற்பனை கூட செய்யவில்லை. ஆனால் முன்னணி நடிகையாக உயர வேண்டும் என்று விரும்பினேன். அதற்காக உழைத்தேன். என்னுடைய எதிர்பார்ப்பு நிறைவேறி இருக்கிறது.
வாழ்க்கை என்பது அர்த்தம் உள்ளதாக இருக்க வேண்டும். ஒவ்வொருவரும் உயர்ந்த இடத்துக்கு வருகிறார்களா என்பது தெரியாது. ஆனால் உயர வேண்டும் என்ற இலக்கு இருக்க வேண்டும்.
முதல் படத்திலேயே வெற்றி கண்ட பல நாயகிகள் பின்னர் காணாமல் போய் இருக்கிறார்கள். எனக்கும் முதல் படம் வெற்றி பெற்றது. அதன் பிறகும் தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்தன. எல்லா படங்களும் நன்றாக ஓடின. இதனால் முன்னணி நடிகை ஆகிஇருக்கிறேன். நான் சினிமாவில் உயர கடுமையாக உழைத்தேன்.
எனக்கு விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது. மற்ற துறையில் உள்ள பெண்கள் திருமணத்துக்கு பிறகு அதில் தொடர்வது போல நானும் திருமணத்துக்கு பிறகும் நடிப்பேன்.
மற்ற தொழில்களை விட சினிமாவில் பெயரும் புகழும் வேகமாக வருகிறது. வேறு தொழில்களில் இது போல் இல்லை. என்றாலும், சினிமாவில் கிடைக்கும் புகழ் நிலையானது அல்ல. கற்பனையான திரைப்பட பாத்திரங்கள் போல இதுவும் நிரந்தரம் அல்ல” என்றார்.
Average Rating