உ.பி.யில் நான்கில் மூன்று பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது பா.ஜ.க..!!
உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில், மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் ஆளுங்கட்சியான சமாஜ்வாடிக்கு பேரிடி விழுந்துள்ளது. சமாஜ்வாடி மட்டுமின்றி காங்கிரஸ், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளின் கடும் போட்டியையும் தகர்த்து பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்துள்ளது.
வாக்கு எண்ணிக்கை முடிவில் பா.ஜ.க. 312 தொகுதிகளை கைப்பற்றியது. அதன் கூட்ணி கட்சிகளான அப்னாதளம் (எஸ்) 9 தொகுதிகளிலும், எஸ்.பி.எஸ்.பி. கட்சி 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. எனவே, பா.ஜ.க. கூட்டணியின் பலம் 325 என்ற வலுவான நிலையில் உள்ளது.
ஆளுங்கட்சியான சமாஜ்வாடி, காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. ஆனால், சமாஜ்வாடி கட்சியால் 47 தொகுதிகளையை பிடிக்க முடிந்தது. காங்கிரஸ் 7 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பகுஜன் சமாஜ் கட்சி 19 தொகுதிகளில் வென்றது. இதன்மூலம் நான்கில் மூன்று பங்கு பெரும்பான்மையுடன் பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்துள்ளது.
இந்த தேர்தலில் குறிப்பிடத்தக்க அம்சமாக, நேரு-காந்தி குடும்பத்தின் கோட்டையான அமேதி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளிலும் காங்கிரஸ் தோல்வியடைந்தது. அதில் மூன்றை பா.ஜ.க. கைப்பற்றி உள்ளது. பிரதமர் மோடியின் மக்களவைத் தொகுதியான வாரணாசிக்கு உட்பட்ட 8 சட்டமன்றத் தொகுதிகளிலும் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது.
முன்னணி தலைவர்கள் தோல்வியடைந்ததை இந்த முடிவுகள் காட்டுகின்றன. முலாயம் சிங் யாதவின் மருமகள் அபர்ணா யாதவ், அமைச்சர்கள் அரவிந்த் சிங் கோபே, பவன் பாண்டே ஆகியோரும் இந்த வி.ஐ.பி. வேட்பாளர்களில் அடங்குவர்.
இந்த தோல்வியை ஏற்றுக்கொண்ட முதல்வர் அகிலேஷ் யாதவ், அடுத்து அமைய உள்ள அரசாங்கம், சமாஜ்வாடி அரசாங்கத்தைவிட சிறப்பாக செயல்படும் என நம்புவதாக கூறினார். மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாகவும், தோல்வி குறித்து ஆராய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Average Rating