இராக்கில் இருந்து படை வாபஸ் இப்போது இல்லை: புஷ்
இராக்கில் இருந்து படைகளை வாபஸ் பெறுவது இப்போது இல்லை என அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கூறினார். அமெரிக்காவின் நாஷ்விலே நகரில் நடைபெற்ற கட்சிக்கு நிதிதிரட்டும் விழாவில் புஷ் இதை தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: இராக்கில் இருந்து அமெரிக்க படைகளை விலக்கிக் கொள்வது மிகப்பெரிய தோல்வியாகவே முடியும். இராக்கில் தற்போது நிலவும் வன்முறையான சூழலில் படைகளை விலக்கிக் கொண்டால் அது அமெரிக்காவின் நம்பகத் தன்மையை பாதிக்கும்.
சிலர் கூறுவதுபோல பணிகள் முடிவதற்கு முன்பே படைகளை விலக்கிக் கொண்டால் அது சர்வதேச பயங்கரவாதத்துக்கு எதிரான அமெரிக்காவின் போருக்கு மிகப்பெரிய தோல்வியை ஏற்படுத்தும் என்றார் அவர். இராக்கில் பணியாற்றும் பெண்கள் உள்பட 1 லட்சத்து 41 ஆயிரம் அமெரிக்கர்கள் மத்தியில் விரைவில் தாய்நாடு திரும்பலாம் என்று நம்பிக்கை காணப்பட்ட நிலையில் புஷ்ஷின் பேச்சு அவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.