குரங்குகளால் வளர்க்கப்பட்ட எட்டு வயதுச் சிறுமி மீட்பு..!!
உத்தரப் பிரதேசத்தில், குரங்குகளுடனேயே வாழ்க்கை நடத்தி வந்த சுமார் எட்டு வயதுச் சிறுமியை பொலிஸார் மீட்டுள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தின் கத்தர்நியாகட் வனவிலங்குச் சரணாலயப் பகுதியில் ரோந்து சென்ற பொலிஸார், ஓரிடத்தில் குரங்குக் கூட்டம் ஒன்றின் மத்தியில் சிறுமி ஒருத்தி அமர்ந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவளைக் காப்பாற்ற பொலிஸார் முயற்சித்தபோதும், அச்சிறுமி குரங்குகளுடனேயே தப்பிச் செல்ல முயற்சித்திருக்கிறாள். மேலும், குரங்குக் கூட்டத்துடன் அவர் சினேக பாவத்துடனும் பழகியிருக்கிறாள்.
மிகுந்த சிரமத்தின் மத்தியில் குரங்குக் கூட்டத்திடமிருந்து அச்சிறுமியைப் பிரித்து அழைத்து வந்த பொலிஸார் அவளை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
மனிதர்களைக் கண்டு பயந்துபோயிருக்கும் அந்தச் சிறுமியைப் பரிசோதித்த வைத்தியர்கள், அவளிடம் மனிதர்களின் பழக்க வழக்கங்கள் எதுவும் காணப்படவில்லை என்றும், எந்தவொரு மொழியும் தெரியவில்லை என்றும், அச்சிறுமி கடந்த சுமார் எட்டு வருடங்களாக குரங்குகளுடனேயே வாழ்க்கை நடத்தி வந்திருக்கவேண்டும் என்றும் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறெனினும், சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறிய வைத்தியர்கள், அச்சிறுமி உணவுகளை கையில் எடுத்துச் சாப்பிடாமல் நேரடியாக வாயினாலேயே சாப்பிடுவதாகவும், கால்களால் மாத்திரம் நடக்க முடிந்தாலும், திடீரென கைகளையும் நிலத்தில் ஊன்றி குரங்குகள் போலவே நடப்பதாகவும், சிகிச்சையின்போது திடீர் திடீரென்று ஆவேசப்படுவதாகவும் கூறியுள்ளனர்.
அச்சிறுமியின் பெற்றோர் குறித்தும், பின்னணி குறித்தும் ஆராய பொலிஸார் முடிவெடுத்துள்ளனர்.
Average Rating