ஈரான் நாட்டில் பயங்கர விபத்து விமானம் தீப்பிடித்து 80 பயணிகள் பலி
ஈரானில் பயணிகள் விமானம் தீப்பிடித்து எரிந்ததில், 80 பேர் கருகி செத்தனர். மீட்கப்பட்டவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. ஈரான் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள துறைமுகம் நகரம் பந்தர் அப்பாஸ். நேற்று இங்கிருந்து வடகிழக்கில் உள்ள மஸ்ஹாத் என்ற நகருக்கு பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றது. ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட டூப்லே வகையைச் சேர்ந்த இந்த விமானத்தில் 147 பயணிகள் இருந்தனர்.
தீப்பிடித்தது
விமானம் மஸ்ஹாத் விமான நிலையத்தில் தரையிறங்கிய போது திடீரென டயர் வெடித்தது. இதையடுத்து விமானம் கட்டுப்பாட்டை இழந்து ஓடு தளத்தை விட்டு விலகி ஓடியது. அடுத்த சில நொடிகளில் விமானம் முழுவதும் தீப்பிடித்துக் கொண்டது. இந்திய நேரப்படி பகல் 1.45 மணி அளவில் இச்சம்பவம் நடைபெற்றது.
உடனே மீட்பு குழுவினரும், தீயணைப்பு வாகனங்களும் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். பெரும் போராட்டத்துக்குப் பிறகு விமானத்தில் பற்றிய தீ அணைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பயணிகளை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
80 பேர் சாவு
இந்த பயங்கர சம்பவத்தில் 80 பேர் பலியானதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறி உள்ளார். எனினும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. முன்னதாக விபத்தில் 60 பேர் மட்டுமே இறந்ததாக அந்நாட்டு தொலைக்காட்சி அறிவித்தது.
தொடர் விபத்து
ஈரான் நாடு, நவீன ரக விமானங்களையும், உதிரி பாகங்களையும் மேற்கத்திய நாடுகளில் இருந்து வாங்க அமெரிக்கா தடை விதித்து உள்ளது. இதனால் அந்நாட்டில் பெரும்பாலும் பழைய விமானங்களே இயக்கப்பட்டு வருகின்றன. இதில் அண்மைக்காலமாக ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட விமானங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றன.