கடற் புலிகளின் 12 படகுகள் கடற்படையினரால் நிர்மூலம்
காங்கேசந்துறை துறைமுகத்தில் பாரிய தாக்குதல் ஒன்றை மேற்கொள்வதற்கு முயற்சித்த கடற்புலிகளின் 12 படகுகளைப் படையினர் தாக்கி அழித்துள்ளார்கள். நேற்று இரவு 7.50 மணி தொடக்கம் இன்று அதிகாலை 4.30 மணி வரை இக்கடற்சமர் நீட்டித்துள்ளது. இத்தாக்குதலுக்கு சுமார் 25 படகுகளுடன் கடற்புலிகள் வந்ததாகவும் கடற்படையினர் தொடுத்த கடுமையான பதில் தாக்குதலில் பலத்த சேதங்களுடன் கடற்புலிகள் பின்வாங்கியதாகவும் கடற்படை ஊடகப்பேச்சாளர் டி.பீ.கே. தஸநாயக்க இன்று காலை தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கூறுகையில் :
தாளையடிப் பிரதேசத்திலிருந்து கடற்படை முகாமை நோக்கி வந்த புலிகளின் படகுகளை இனங்கண்ட கடல் ரோந்து படையினர் தாக்குதல்களை நடத்தத் தொடங்கினர். உதவிக்கு தரையிலிருந்தும் பீரங்கித் தாக்குதல்களை படையினர் மேற்கொண்டனர்.
இதனால், புலிகள் எதிர்பாராத ஒரு பின்னடைவை சந்தித்தனர். இத்தாக்குதலில் நு}ற்றுக்குமதிகமான புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தாக்குதலுக்காக வந்த 25 படகுகளில் 12 நிர்மூலமாக்கப்பட்டதுடன் 5 படகுகளுக்கு பாரிய சேதங்கள் ஏற்பட்டன. இதில் 7 படகுகள் தீக்கிரையாகின. தற்கொலையாளிகளுடன் வந்த 3 படகுகள் நீரில் மூழ்கடிக்கப்பட்டன.
திருகோணமலைத் துறைமுகத்தையும் அங்குள்ள படை முகாம்களையும் இலக்கு வைத்து சம்பூரில் புலிகள் முகாமிட்டுள்ளதுபோல் காங்கேசன்துறை துறைமுகத்தையும்; பருத்தித்துறையையும் இலக்கு வைத்து அவர்கள் தாளையடியில் முகாம் அமைத்துள்ளனர்.
புலிகளின் இத்தாக்குதலில் கடற்படையினரின் இரு டோராப் படகுகள் சிறு சேதங்களுக்கு உள்ளாகியதாகவும், கடற்படையினர் இருவர் காயமடைந்ததாகவும் டி.பி.கே. தஸநாயக்க மேலும் தெரிவித்தார்.