பிரபல நடிகருக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பை பார்த்து உருவாக்கப்பட்ட பாகுபலி இடைவெளி..!!
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘பாகுபலி-2’ இந்திய திரையுலகின் பல்வேறு சாதனைகளையும் முறியடித்து வருகிறது. பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களையும் பார்த்தவர்களுக்கு இடைவெளி காட்சிகள் என்றைக்குமே மறக்கமுடியாது. அந்தளவுக்கு அந்த காட்சியை அனைவரும் மெய்சிலிர்க்க வைக்கும் விதமாக படமாக்கியிருப்பார்கள்.
முதல் பாகத்தில் கீழே விழப்போகும் பல்லாள தேவனுடைய சிலையை ஒற்றைக்கையால் தாங்கி பிடித்துக் கொண்டு விடைபெறும் மகேந்திர பாகுபலியை பார்க்கும் மக்கள் ‘பாகுபலி.. பாகுபலி..’ என்று உரக்க குரல் எழுப்புவார்கள்.
அதேபோல், இரண்டாம் பாகத்தில் அமரேந்திர பாகுபலி மகிழ்மதி அரசாங்கத்தின் சேனாதிபதியாக பொறுப்பேற்கும் சமயத்தில் ஒட்டுமொத்த மக்களும் ‘பாகுபலி… பாகுபலி’ என்று உரக்க குரல் எழுப்புவார்கள். அதேசமயத்தில் வீரர்கள் அனைவரும் தங்கள் போர் கருவிகளை வைத்து அந்த மைதானமே அதிரும் அளவுக்கு தரையில் தட்டுவார்கள். யானைகள் மண்டியிட்டு வணங்கும். இப்படியாக செல்லும் அந்த காட்சி அனைவரையும் கொஞ்சம் நேரம் உறைய வைக்கும்.
இந்த காட்சியை இப்படத்தின் கதையாசிரியான விஜயேந்திர பிரசாத், ஒரு பிரபல நடிகருக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பை மனதில் வைத்துதான் படத்தில் சேர்த்ததாராம். அவர் யாரென்றால், தெலுங்கு உலகில் பவர் ஸ்டாராக திகழும் பவன் கல்யாண்தான். ஒருமுறை பவன் கல்யாண் படத்தின் ஆடியோ வெளியீட்டில் விஜயேந்திர பிரசாத் கலந்துகொண்டாராம்.
அப்போது அவரை அறிமுகப்படுத்தும் சமயத்தில் ரசிகர்கள் அனைவரும் ‘பவர் ஸ்டார்…. பவர் ஸ்டார்..’ என்று ஆர்ப்பரிக்க அந்த அரங்கமே அதிர்ந்ததாம். அதை மனதில் வைத்துக்கொண்டு அதேபோல், பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களின் இடைவேளைகளிலும் அதேபோன்றதொரு காட்சி வரும்படி கதையை எழுதினாராம். இதை சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரே தெரிவித்துள்ளார்.
Average Rating