மாணவியின் உடலை வைத்து மாந்திரீக பூஜை: பெரம்பலூர் மந்திரவாதி தம்பதிக்கு 19-ந்தேதி வரை காவல் நீட்டிப்பு..!!
பெரம்பலூர் புதிய பஸ்நிலையம் அருகே எம்.எம்.நகர் மாடி வீட்டில் கடந்த மார்ச் 10-ந்தேதி அழுகிய துர்நாற்றம் வீசியதால் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது பெரம்பலூர் கல்யாண் நகரை சேர்ந்த மந்திரவாதி கார்த்திக்கேயன் என்பவர் தனது மனைவி நஸீமா என்கிற தீபிகா மற்றும் வேலைக்காரர்கள் இருவர் தங்கியிருப்பதும், அங்குள்ள பூஜை அறையில் சவப்பெட்டியில் சென்னையை சேர்ந்த மாணவி அபிராமியின் அழுகிய உடல், 20 மண்டை ஓடுகள், மாந்திரீக புத்தகங்கள், வெங்கல விநாயகர் சிலை, மாந்திரீக மை டப்பாக்கள், தகடுகள் மற்றும் 30 கடல் குதிரைகள் இருப்பதும் தெரியவந்தது.
மாணவியின் உடலை வைத்து கார்த்திக்கேயன் மாந்திரீகபூஜையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து மந்திரவாதி கார்த்திக்கேயன், மனைவி தீபிகா , இளம்பெண் அபிராமி உடலை சென்னையில் இருந்து கொண்டு வந்த நண்பர் வினோத்குமார், டிரைவர் சதீஷ், உடலை ரூ.20ஆயிரத்திற்கு தோண்டி தந்து விற்ற வெட்டியான்கள் தன்ராஜ், கார்த்திக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதில் கார்த்திக்கேயன் மட்டும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். இதில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் அனைத்தும் நீதிமன்றத்திலும், கடல்குதிரைகள் மட்டும் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டன. இதையடுத்து தடை செய்யப்பட்ட உயிரினத்தை சட்டத்திற்கு புறம்பாக வீட்டில் வைத்திருந்த குற்றத்திற்காக மந்திரவாதி கார்த்திக்கேயன், தீபிகா ஆகியோர் மீது வனத்துறை சார்பில் பெரம்பலூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்ற த்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக மந்திர வாதி கார்த்திக்கேயன், அவரது மனைவி தீபிகா ஆகியோர் பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி சுஜாதா, இருவரது நீதிமன்ற காவலை வருகிற 19-ந்தேதி வரை நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார்.
இதனையடுத்து இருவரும் போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டு அடைக்கப்பட்டனர்.
Average Rating