எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் உள்ள முக்கிய முனை சரிந்ததாக தகவல்..!!
உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் உள்ள ஹிலாரி முனை சரிந்துள்ளதாகவும், இனிவரும் காலங்களில் மலையேற்ற வீரர்களுக்கு இது ஆபத்தாக இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகின் மிக உயரமான சிகரமாக கருதப்படும் இமய மலையில் உள்ள எவரெஸ்ட் சிகரம் நேபாளத்தில் இருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள மலையேற்ற வீரர்கள் இந்த சிகரத்தில் ஏறுவதை தங்கள் வாழ்நாள் சாதனையாக எண்ணி வருகின்றனர். இச்சிகரத்தின் உச்சியை அடையும் வழியில் இருக்கக்கூடிய ஹிலாரி முனை சரிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹிலாரி முனை அழிந்துவிட்ட செய்தியை பிரிட்டனை சேர்ந்த மலையேற்ற வீரரும் மற்றும் பயணக் குழு தலைவருமான டிம் மோஸ்டேல் மே 16 ஆம் தேதி மலை உச்சியை அடைந்த பிறகு உறுதிப்படுத்தியுள்ளார். தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் ,”ஹிலாரி ஸ்டெப் இனி இல்லை, அது அழிந்துவிட்டது” என்று பதிவிட்டுள்ளார்.
மலையேற்ற வீரர்களுக்கு பெரும் சவாலாக இருக்கும் இம்முனை சுமார் 12 மீட்டர் உயரத்திற்கு பாறைகள் உடைய பகுதியாக இருந்து வந்தது. எப்போது இம்முனை சரிந்திரிக்கும் என்பது சரிவர தெரியவில்லை. இருப்பினும், கடந்த 2015-ம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது சரிந்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 1953 ஆம் ஆண்டில் முதன்முறையாக எவரெஸ்ட் சிகரத்தை ஏறிய சர் எட்மண்ட் ஹிலாரியின் நினைவாக இந்த பகுதிக்கு அவருடைய பெயர் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Average Rating