புதுப்பெண் விஷம் குடித்து உயிரிழப்பு – அதிர்ச்சியில் கணவரும் தற்கொலை..!!
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் பாண்டியராஜன் (வயது 32). டிப்ளமோ படித்து விட்டு விவசாயம் செய்து வந்தார்.
இவருக்கும், குறிஞ்சிப்பாடி அருகே உள்ள வானதிபுரத்தைச் சேர்ந்த கவுசல்யா (22) என்பவருக்கும் கடந்த 8-ந் தேதி திருமணம் நடந்தது. கவுசல்யா பி.ஏ. பட்டதாரி ஆவார்.
கணவன்-மனைவி இருவரும் சேத்தியாத்தோப்பில் வசித்து வந்தனர். திருமணம் முடிந்த பிறகும் பாண்டியராஜன் விவசாய வேலைக்கு சென்று வந்தார். தனது கணவர் டிப்ளமோ படித்து விட்டு விவசாயம் செய்வது கவுசல்யாவுக்கு பிடிக்கவில்லை.
கணவரிடம் டிப்ளமோ படித்த நீங்கள் ஏன் விவசாயம் செய்கிறீர்கள்? வேறு ஏதாவது வேலை பார்க்கலாம் அல்லவா? என்று கவுசல்யா கேட்டார்.
இதனால் கணவன்-மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. நேற்றும் மீண்டும் இருவருக்குள் இது சம்பந்தமாக தகராறு ஏற்பட்டது. இதனால் கவுசல்யா மனமுடைந்து காணப்பட்டார்.
விரக்தி அடைந்த கவுசல்யா திடீரென்று வீட்டில் இருந்த விஷத்தை குடித்தார். வாயில் நுரை தள்ளியபடி அவர் மயங்கி விழுந்தார்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பாண்டியராஜன் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தார். உடனே அவரும் மனைவி குடித்து மீதி வைத்திருந்த விஷத்தை குடித்தார். சிறிது நேரத்தில் அவரும் மயங்கி விழுந்தார்.
அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே கவுசல்யா பரிதாபமாக இறந்தார். பாண்டியராஜன் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பாண்டியராஜனும் இறந்து விட்டார்.
இந்த சம்பவம் குறித்து சேத்தியாத்தோப்பு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் திருமணமாகி 21 நாட்களிலேயே புதுமண தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதால் சிதம்பரம் கோட்டாட்சியர் விஜயாவும் விசாரணை நடத்தி வருகிறார்.
விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட பாண்டியராஜன்-கவுசல்யாவின் உடல் இன்று மாலை சேத்தியாத்தோப்பில் அடக்கம் செய்யப்படுகிறது.
இந்த சம்பவத்தால் சேத்தியாத்தோப்பு மேட்டுத்தெரு கிராம மக்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.
Average Rating