ரஜினி எப்போது அரசியல் பிரவேசம் செய்யப்போகின்றார்?..!! (கட்டுரை)

Read Time:13 Minute, 22 Second

image_95a8646e41கபாலி’க்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம் ‘காலா’. இரசிகர்கள் சந்திப்பில் அரசியல் பிரவேசம் குறித்துப் பரபரப்புடன் பேசிய ரஜினி, புதிய படத்துக்கான பெயரை அறிவித்து விட்டார்.

ரஜினியின் திரைப்படங்கள் திரையரங்குகளில் கைதட்டலைப் பெறும். பால் அபிஷேகங்கள் நடக்கும். முதல் வரிசையில் அமர்ந்திருக்கும் ரசிகர்களின் ‘விசில்’ சத்தம் திரையரங்கின் திரைகளைக் கூடக் கிழிக்கும். ஆனால், அவரின் அன்றைய ரசிகர் சந்திப்பு, தமிழகத்தில் மட்டுமல்ல, அகில இந்திய அளவில் இப்போது பரபரப்பாகியிருக்கிறது.

ஆந்திராவில் என்.டி.ஆர், தமிழகத்தில் எம்.ஜி.ஆர், இப்போது ரஜினியா என்ற கேள்வி அனைவர் மட்டத்திலும் எழுந்திருக்கிறது. ரஜினி நின்றாலும் செய்தி. நகர்ந்தாலும் செய்தி என்ற நிலை பத்திரிகைகளுக்கும், பார்வையாளர்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது.

திரைப்படம் எடுத்தவர், இப்போது தன் ரசிகர்களுடன் சேர்ந்து படம் எடுத்துக் கொண்டார்.

அது அவருக்கும், ரசிகர்களுக்கும் தீராத ஆசை. அது மட்டுமல்ல, அவரின் அரசியல் பிரவேசத்தை ரஜினி ரசிகர்கள் மட்டுமல்ல, அரசியல் தலைவர்களும் எதிர்பார்க்கிறார்கள் என்பதும் நீண்ட நாள் ஆசை.

இதுபோன்ற சூழலில்தான், “அரசியலுக்கு வந்தால் சம்பாதிப்பவர்களைப் பக்கத்தில் வைத்துக் கொள்ள மாட்டேன்”, “தமிழகத்தில் ‘சிஸ்டம்’ கெட்டுப் போய் விட்டது”, “போர் வரும் போது பார்த்துக் கொள்ளலாம்” என்ற ‘கபாலி’யின் பேச்சு, ரஜினியின் ரசிகர்களுக்கு மட்டும் மகிழ்ச்சி அல்ல; இரு திராவிடக் கட்சிகளுக்கும் மாற்றாக ஓர் அரசியலைத் தமிழகத்தில் ஏற்படுத்தி விட வேண்டும் என்று கருதும் பா.ஜ.கவுக்கும் மகிழ்ச்சி!

ரஜினியின் அறிவிப்பு மற்ற அரசியல் கட்சிகளுக்கு தலைவலியை உருவாக்கி விட்டது. காங்கிரஸ் கட்சி சார்பில் திருநாவுக்கரசர், “ரஜினி தனிக் கட்சி தொடங்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார். பா.ஜ.கவோ “ரஜினி மட்டுமல்ல. தமிழக மக்கள் அனைவருமே பா.ஜ.கவில் இணைய விருப்பமாக இருக்கிறார்கள்” என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஆருடம் சொல்லியிருக்கிறார்.

‘பாகுபலி’ படப் பிரச்சினையில் சத்யராஜை கன்னடர்கள் விமர்சித்தபோது, ரஜினி பதில் சொல்லாதது ஏன்” என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி காட்டமாகப் பேட்டி கொடுத்தார்.

தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், “அரசியலுக்கு வருவது அவர் விருப்பம். வந்தால் வரவேற்போம்” என்று வெளிப்படுத்தியிருக்கிறார்.

“பா.ஜ.கவிடம் ரஜினி விழுந்து விடக்கூடாது” என்று எச்சரித்தார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்.

பாட்டாளி மக்கள் கட்சி இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், “தமிழகத்துக்கு ஆக்டர் தேவையில்லை. நல்ல டாக்டர் வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.
நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானோ, “சினிமாவில் சம்பாதித்து விட்டுப் போங்கள்.

ஆனால், நாட்டை ஆளும் உரிமை எனக்குத்தான் இருக்கிறது” என்று காரசாரமாகக் கூறியிருக்கிறார். இத்தனைக்கும் ஸ்டாலின், அன்புமணி, திருமாவளவன், சீமான் ஆகியோரை ரசிகர் சந்திப்பில் பாராட்டிப் பேசினார் ரஜினி காந்த்.

ரஜினி பாராட்டியும், ஸ்டாலின் தவிர மற்ற அனைவரும் ரஜினி மீது காட்டமாக ஏன் பேசினார்கள்? தங்களைப் பாராட்டுவது, தங்களின் தொண்டர்களை இழுக்கவே என்ற அச்சமே இதற்குக் காரணம். ரஜினியின் இந்தத் திடீர் அறிவிப்புக்கு அவர் அறிவித்துள்ள புதிய படம் ‘காலா’ ஒரு காரணம் என்றால், “பா.ஜ.க கொடுக்கும் அழுத்தமும்” இன்னொரு காரணம்.

முதலமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது, “அதிரடி அரசியல் கருத்தை” பாட்ஷா திரைப்பட விழாவில் வெளியிட்டார் ரஜினி. அன்றிலிருந்து அ.தி.மு.கவுக்கும் ரஜினிக்கும் மோதல் தொடங்கியது. “தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது” என்று ஒரு பிரசார யுத்தத்தை அ.தி.மு.கவுக்கு எதிராக நடத்தி, 1996 சட்டமன்ற தேர்தல் முடிவைத் திசை திருப்பியவர் ரஜினி.

அப்போதுதான், தி.மு.கவும் தமிழ் மாநில காங்கிரஸும் இணைந்த கூட்டணி, வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அது ரஜினி முதலமைச்சர் பதவிக்கு வருவதற்கு ஏற்ற காலம். ஆனால், அதை கோட்டை விட்டார்.

ஆனால், இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கலைஞர் கருணாநிதி செயல்படவில்லை. அ.தி.மு.க பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா உயிரோடு இல்லை. இந்த வெற்றிடத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது ரஜினிக்கு கொடுக்கப்பட்ட அறிவுரை.

ஆனால், இதே ரஜினியின் குரல் 1998, 2004 ஆகிய தேர்தல்களில் தோல்வியைச் சந்தித்து உள்ளது என்பதும் மறப்பதற்கில்லை. உதாரணமாக, கோவை குண்டு வெடிப்பு நடைபெற்ற நேரத்தில் கொடுத்த குரல், பிரதமராக இருந்த வாஜ்பாய் மீண்டும் தேர்தலைச் சந்தித்தபோது கொடுத்த குரல் இரண்டும் எடுபடவில்லை.

2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது கூட, பா.ஜ.கவின் பிரதமர் வேட்பாளராக இருந்த நரேந்திரமோடி, போயஸ் தோட்ட இல்லத்துக்குச் சென்று ரஜினியைச் சந்தித்தார். ஆனால், அதுவும் பா.ஜ.கவுக்குத் தமிழகத்தில் கைகொடுக்கவில்லை.

தமிழகத்தில் இரு பெரும் தலைவர்கள் அரசியலில் இல்லாத சூழலைப் பயன்படுத்தி, ரஜினி அரசியல் பிரவேசம் செய்யலாம் என்பதுதான் இன்றைக்கு எங்கும் கேட்கும் குரலாக இருக்கிறது. அவருடையை அரசியல் பிரவேச பேச்சுகளை பா.ஜ.கவில் உள்ள மாநில நிர்வாகிகள் முதல், அகில இந்திய அளவில் உள்ள அமித் ஷா வரை வரவேற்று இருக்கிறார்கள்.

ஸ்டாலினைச் சிறந்த நிர்வாகி என்று பாராட்டிய சூப்பர் ஸ்டார், பிரதமர் நரேந்திரமோடியைப் பாராட்டவில்லை. அதற்காகக்கூட பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா கோபித்துக் கொள்ளவில்லை. ஆகவே, மோடியை ரஜினி பாராட்டாமல் விட்டது ஒரு வியூகம் என்பதே உண்மை.

இப்போதே அவர் பிரதமரை பாராட்டி விட்டால், ரஜினி பா.ஜ.கவின் குரலாக வருவார் என்ற பிரசாரம் தலைதூக்கும். அது, ரஜினியின் அரசியல் பிரவேசத்துக்கு இலாபமில்லை. பா.ஜ.கவுக்கும் கூட பிரயோசனமில்லை.

2009 காலகட்டத்தில் எப்படித் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி மீது “எதிர்ப்பு அலை” இருந்ததோ, அது மாதிரியொரு சூழல் தமிழகத்தைப் பொறுத்தவரை பா.ஜ.கவுக்கு ஏற்பட்டுள்ளது. நாடுமுழுவதும் ‘மோடி அலை’ வீசியபோது, தமிழகத்தில் அப்படியொரு அலை கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க வெற்றிக்குக் கை கொடுக்கவில்லை.

அப்படியிருக்கும்போது, இன்றைக்கு தமிழகத்தின் காவிரிப் பிரச்சினை, ஹைட்ரோ கார்பன் பிரச்சினை, விவசாயிகள் பிரச்சினை, மீனவர்கள் பிரச்சினை, நீட் பிரச்சினை என்று இத்தனை பிரச்சினைகளிலும் மத்திய அரசை அனைத்துக் கட்சிகளும் குற்றம் சாட்டும் போது, மீண்டும் தமிழகத்தில் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் ‘மோடி அலை’ வீசுவதற்கு சாத்தியமில்லை. இதை ரஜினி நன்கு புரிந்து வைத்துள்ளார். அதனால்தான் மோடியைப் பாராட்டாமல் அமைதி காக்கிறார்.

ரஜினி தனிக் கட்சியா அல்லது பா.ஜ.கவின் குரலா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழக நலன்களுக்கான மத்திய அரசின் திட்டங்களை நிறைவேற்றினால் பா.ஜ.கவின் குரலாக இருக்கலாம். இல்லையென்றால் தனிக்கட்சிதான் என்ற நிலையில் ரஜினி இருக்கிறார்.

அவரின் தனிப்பட்ட அரசியல் பிரவேசம் சிறிய கட்சிகளைப் பாதிக்கும். முக்கிய கட்சிகளாக இருக்கும் தி.மு.கவும் அ.தி.மு.கவும் அப்படியொரு பாதிப்பைச் சந்திக்குமா என்பது கேள்விக்குறி. தி.மு.கவில் இப்போதைக்கு வாக்கு வங்கி பிளவு எழவில்லை.

ஆனால், அ.தி.மு.கவுக்குள் இரு அணிகளாகப் பிரிந்து நின்றாலும், அந்த வாக்கு வங்கி, அந்த இரு அணிகளுக்குள்தான் பிரிந்து நிற்கிறது; வெளியே செல்லவில்லை.

தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய இரு முக்கிய கட்சிகளின் வாக்கு வங்கியைப் பிரித்து, முதலமைச்சர் ஆகும் அளவுக்கு ஒரு பிரத்தியேக வாக்கு வங்கி (அதாவது 30 சதவீதம் வரை) ரஜினிக்கு கிடைக்குமா என்பதுதான் இன்றைக்கு கேள்வி.

1989 இல் காங்கிரஸ் எடுத்த முயற்சியும் 2006 இல் நடிகர் விஜயகாந்த் எடுத்த முயற்சியும் ஏன் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடியே முன்னெடுத்து உருவாக்கிய அணியும், தமிழகத்தில் திராவிடக் கட்சிகளுக்கு மாற்று என்ற அணியை உருவாக்க முடியவில்லை.

ஜெயலலிதா மறைந்து விட்டார்; கருணாநிதி அரசியலில் இல்லை என்பது ரஜினிக்கு உள்ள சாதகமான அம்சங்களாகக் காட்சியளிக்கின்றன. ஆகவே, இந்த வரலாறுகளைத் தூக்கியெறியும் பலம் இன்றைக்கு சூப்பர் ஸ்டாருக்கு இருக்கிறதா என்பதை இனி வரும் காலங்களில் ஏற்படும் அடுத்தடுத்த நிகழ்வுகள்தான் நிரூபிக்கும்.

இன்றைய சூழலைப் பொறுத்தவரை ரசிகர்களின் சந்திப்புக்குப் பிறகு, புதிய படத்துக்குத் தலைப்பு வைத்து விட்டார் ரஜினி. நீண்ட காலமாகத் தன்னுடன் ‘போட்டோ’ எடுத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பிய ரசிகர்களின் ஆசையையும் நிறைவேற்றி வைத்து விட்டார். ஆனால், அரசியல் பிரவேசத்தை எப்போது செய்யப் போகிறார் என்பது இன்னும் மில்லியன் டொலர் கேள்வியாகவே தொடருகிறது. அதனால், கடந்த காலங்களில் வெளிவந்த ரஜினியின் அரசியல் பேச்சுகள் போல், இதுவும் அந்த ரகம்தான் என்ற நிலை ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாகுபலி ஹீரோவுக்கு வில்லனான விஜய் பட வில்லன்..!!
Next post விமான விபத்திலிருந்து தப்பித்த சன்னி லியோன்…!!