கழுத்தில் கயிறை கட்டி மனைவியை தரதரவென இழுத்துச் சென்ற கொடூர கணவன்..!!
ஜேர்மனியில் தமது மனைவியை கழுத்தில் கயிறை கட்டி சாலை வழியே வாகனத்தில் இழுத்துச் சென்ற கொடூர கணவனுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஜேர்மனியின் Hamelin நகரில் குறித்த சம்பவம் நடந்துள்ளது. குறித்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இதுபோன்ற ஒரு கொடூர சம்பவத்தை தற்காலத்தில் சிந்தித்து பார்க்கவே கொடுமையாக உள்ளது என தெரிவித்துள்ளது.
துருக்கிய பெண்மணியான Kader என்பவரை ஜேர்மானிய குடிமகனான Nurettin இஸ்லாமிய முறைப்படி கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளார்.
திருமணத்திற்கு பின்னர் இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து மோதல் ஏற்பட்டதுடன், Nurettin தமது மனைவியை கடுமையாக தாக்கியும் கெட்ட வார்த்தைகளால் திட்டியும் வந்துள்ளார்.
இந்த நிலையில் 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இருவருக்கும் ஒரு குழந்தை பிறந்துள்ளது. இருப்பினும் இருவருக்கும் இடையான வாக்குவாதமும் கருத்து வேற்பாடும் அதிகரித்த வண்ணமே இருந்துள்ளது.
இதனிடையே 2015 ஆம் ஆண்டு மே மாதம் இருவரும் பிரிந்து வாழத்துவங்கினர். ஆனால் அதே ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் திகதி பணம் குறித்த வாக்குவாதத்தால் Nurettin கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
மட்டுமின்றி கத்தியால் தமது மனைவியை தாக்கிய Nurettin, ஆத்திரம் அடங்காமல் அவரது கழுத்தில் கயிறை கட்டி தமது வாகனத்தில் இணைத்து அவரது குடியிருப்பு பகுதியில் இழுத்துச் சென்றுள்ளார்.
சில அடி தூரங்கள் சென்ற நிலையில் கயிறு துண்டானதால் Kader உயிர் பிழைத்துள்ளார். ஆனால் ஒருவார காலம் கோமா நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்துள்ளார்.
Kader-ஐ கயிற்றில் கட்டி இழுத்துச் சென்றபோது அவரது குழந்தையானது குறித்த வாகனத்தின் பின்னிருக்கையில் இருந்துள்ளது.
கணவரின் இந்த கொடூர தாக்குதலில் மூளையில் பாதிப்படைந்துள்ள Kader கடந்த 6 வாரங்களுக்கு முன்னர்தான் மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளார்.
தற்போது இந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வந்த நிலையில் Nurettin என்பவருக்கு 14 ஆண்டுகள் சிறையும் £100,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
Average Rating