பட்டுக்கோட்டை அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு பெண் அடித்துக்கொலை: கணவர் வெறிச்செயல்..!!
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அணைக்காடு நடுத்தெருவை சேர்ந்தவர் செல்லத்துரை. இவர் தேங்காய் பறிக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி செல்வமணி (வயது 30). இவர்களுக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு கிருத்திகா என்ற மகளும், ராஜதுரை என்ற மகனும் உள்ளனர்.
இந்த நிலையில் மனைவி செல்வமணியின் நடத்தையில் செல்லத்துரைக்கு சந்தேகம் எழுந்தது. இது தொடர்பாக அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 6-ந் தேதியும் கணவன், மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த செல்லத்துரை வீட்டில் இருந்த உருட்டுக் கட்டையால் செல்வமணியை சரமாரியாக தாக்கி விட்டு, அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
இதில் படுகாயமடைந்த செல்வமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனை கண்டு குழந்தைகள் அழுதனர். அங்கு சென்ற பொதுமக்கள் கொலை பற்றி பட்டுக்கோட்டை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் செல்வமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இது குறித்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள செல்லத்துரையை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating