பள்ளி மாணவியை கூட்டாக கற்பழித்து ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளிய அவலம்..!!
பீகார் மாநிலம் தெற்கு பகுதியில் உள்ள லக்கிசராய் மாவட்டத்தில் வீட்டை விட்டு வெளியே வந்த பள்ளி மாணவியை ஆறு பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று கற்பழித்தது. இதை தொடர்ந்து அந்த கும்பல் மாணவியை வலுக்கட்டாயமாக ரெயிலில் ஏற்றிச் சென்றது. அதன்பின், ஓடும் ரெயிலில் இருந்து மாணவியை கீழே தள்ளிவிட்டது.
இதை கண்ட அப்பகுதியை சேர்ந்தவர்கள் தண்டவாளத்தில் கிடந்த மாணவியை மீட்டு, பாட்னா அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் பாதிக்கப்பட்ட மாணவியை சேர்க்க மருத்துவமனை நிர்வாகம் முதலில் மறுப்பு தெரிவித்தது. ஆறு மணி நேரத்துக்கு பிறகே அவரை மருத்துவமனையில் அனுமதித்தது. அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், பாதிக்கப்பட்ட மாணவி உயிருக்கு போராடி வருவதாக தெரிவித்தனர்.
தகவலறிந்த ரெயில்வே போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, மாணவியை கற்பழித்த கும்பலை சேர்ந்த ஒருவரை கைது செய்தனர். பள்ளி மாணவியை கடத்தி கூட்டாக சேர்ந்து கற்பழித்து ரெயிலில் இருந்து கீழே தள்ளிய சம்பவம் பீகாரில் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தொடர்பாக பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் கூறுகையில், ‘குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவித்தார்.
Average Rating