வட கிழக்கு இலங்கையில் அமைதி திரும்புகிறது
விடுதலைப் புலிகள் வசம் இருந்த சம்பூரை ராணுவம் பிடித்துள்ள நிலையில் வடகிழக்கில் சண்டை சற்றே ஓய்ந்துள்ளது. கடந்த 2002ம் ஆண்டு ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்தை மீறி ராணுவமும், விடுதலைப் புலிகளும் கடந்த சில வாரங்களாக கடும் சண்டையில் ஈடுபட்டு வந்தனர். ராணுவம் அவ்வப்போது தாக்கி வந்த நிலையில் திரிகோணமலையிலிருந்து விடுதலைப் புலிகள் கடும் தாக்குதலை ஆரம்பித்தனர். திரிகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் முக்கிய பாதையை துண்டித்த புலிகள், யாழ்ப்பாணம் நோக்கி முன்னேறத் தொடங்கினர்.
இதன் காரணமாக யாழ்ப்பாணம் நாட்டின் பிற பகுதியிலிருந்து துண்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தைச் சுற்றிலும் மற்றும் திரிகோணமலை, மூதூர், சம்பூர் உள்ளிட்ட கிழக்குப் பகுதிகளிலும் கடும் சண்டை நடந்து வந்தது.
இந்நிலையில் விடுதலைப் புலிகள் வசம் பல வருடமாக இருந்து வந்த கிழக்கின் முக்கிய துறைமுக நகரான சம்பூரை நேற்று ராணுவம் கைப்பற்றியது. ஆட்டிலரி தாக்குதலால் புலிகளே இங்கிருந்து விலகிவிட்டனர்.
இந்த மீட்புக்குப் பின்னர் வட கிழக்கில் நடந்து வந்த சண்டை சற்றே ஓய்ந்துள்ளது. சம்பூரில் புதைத்து வைக்கப்பட்டுள்ள கண்ணி வெடிகளை ராணுவம் அகற்றும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
இதுகுறித்து இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு செய்தித் தொடர்பாளர் தொர்பின்னூர் ஓமர்சன் கூறுகையில், ராணுவம் தனது தாக்குதலை மட்டுப்படுத்தியுள்ளது ஆறுதல் அளிக்கிறது. இல்லாவிட்டால் அமைதி ஒப்பந்தம் முற்றிலும் சீர்குலைந்து போயிருக்கும். இதுதொடரும் என நம்புகிறோம்.
போர் நிறுத்த ஒப்பந்தம் முடிந்து விட்டதா என புலிகள் தரப்பு கேட்கிறது. ஆனால் நிச்சயம் போர் நிறுத்த ஒப்பந்தம் மு¬டியவில்லை என்பதே எங்களது பதிலாகும் என்றார் ஓமர்சன்.
வடகிழக்கில் நடந்து வந்த சண்டையால் 2 லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் வீடுகளைவிட்டு வெளியேறியுள்ளனர். நூற்றுக்கணக்கான தமிழர்கள்அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர்.
இதற்கிடையே, சம்பூரை விட்டு விலகிய புலிகள் தலைநகர் கொழும்பு உள்பட நாட்டின் எந்தப் பகுதியிலும் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனால் கொழும்பு நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சம்பூரை ராணுவம் கைப்பற்றியது போர்நறுத்த ஒப்பந்தத்தை மீறிய செயலாகும் என்று விடுதலைப் புலிகளின் சமாதான பிரிவு தலைவர் பூலித்தேவன் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை ராணுவம் மீறி விட்டது. இதன் வெளிப்பாடே சம்பூரை ராணுவம் எடுத்திருப்பது. ராணுவம் தனது நிலையிலிருந்து மாறினாலும் கூட விடுதலைப் புலிகளின் நிலையில் மாற்றம் இல்லை என்றார்.