சினிமா டிக்கெட் கட்டணம் நாளை முதல் உயருகிறது..!!
மத்திய அரசு விதித்துள்ள ஜி.எஸ்.டி. வரிக்கு சினிமா தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இந்தநிலையில் ஜி.எஸ்.டி. வரி பற்றி முடிவு எடுப்பதற்காக திரையரங்கு உரிமையாளர்களின் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த திரையரங்கு உரிமையாளர்கள் கலந்துகொண்டார்கள்.
ஜி.எஸ்.டி. வரி காரணமாக சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்த திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதுபற்றி அவர்கள் கூறியதாவது:-
ஜி.எஸ்.டி. வரி விதிப்பு காரணமாக நாளை (சனிக்கிழமை) முதல் தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்து இருக்கிறோம்.
இப்போது ரூ.100-க்கு விற்கப்படும் டிக்கெட், இனிமேல் ஜி.எஸ்.டி. வரி சேர்த்து ரூ.120-க்கு விற்கப்படும். ரூ.120 டிக்கெட், ரூ.153-க்கு விற்கப்படும்.
நாளை முதல் டிக்கெட் முன்பதிவையும் உயர்த்தப்பட்ட விலையிலேயே தொடங்கி இருக்கிறோம். சினிமா டிக்கெட் விவகாரத்தில் தமிழக அரசு நிலை என்ன? என்பதை இன்னும் தெளிவாக விளக்கவில்லை.
ஜி.எஸ்.டி. அமலான பிறகு ஒரு வேளை தற்போது நாங்கள் செலுத்தி வரும் 30 சதவீதம் நகராட்சி வரியையும் செலுத்த வேண்டும் என்று தமிழக அரசு கூறினால், எங்களால் திரையரங்குகளை நடத்த முடியாத நிலை ஏற்படும்.
ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பக்கத்து மாநிலங்கள் நகராட்சி வரியை ரத்து செய்துவிட்டு ஜி.எஸ்.டி. மட்டுமே வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளன.
அதே போன்று தமிழக அரசும் அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு திரையரங்கு உரிமையாளர்கள் கூறினார்கள்.
Average Rating