மூத்த பெண்ணிடம் பழக்கம்: கள்ளக்காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை..!!
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் குழல்மன்னம் புத்தனூர் பகுதியை சேர்ந்தவர் ரஜினிகாந்த் (வயது 31). கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.
இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் ஓமனா (51). திருமணமாகவில்லை. இவருக்கும் வாலிபர் ரஜினிகாந்த்துக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
வேலை இல்லாதபோது ஓமனா வாலிபர் ரஜினிகாந்துக்கு பண உதவி செய்து வந்தார். இதனால் அவர்களது நட்பு நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது.
இது குறித்து மனைவிக்கு தெரியவந்ததும் அதிர்ச்சியடைந்தார். ஓமனாவுடன் உள்ள தொடர்பை துண்டிக்கும்படி எச்சரித்தார். ஆனால் ரஜினிகாந்த் கள்ளக்காதலை கைவிடவில்லை. கள்ளக்காதலால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
நேற்று காலை ரஜினிகாந்த் வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். இந்நிலையில் ஓமனாவின் வீடு நீண்ட நேரம் திறக்கப்படவில்லை. மாலை 6 மணிக்கு அக்கம் பக்கத்தினர் ஓமனாவின் வீட்டுக்கு சென்று கதவை திறந்து பார்த்தனர். அப்போது ரஜினி காந்தும், ஓமனாவும் தூக்கில் பிணமாக தொங்கினர். அதிர்ச்சியடைந்த பொது மக்கள் இது குறித்து பாலக்காடு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து தூக்கில் பிணமாக தொங்கிய கள்ளக்காதல் ஜோடியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாலக்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில் வயதில் மூத்த பெண்ணுடன் ரஜினி காந்த்துக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனை அவரது மனைவி தட்டிக்கேட்டார்.
கள்ளக்காதலை மனைவி கைவிட எச்சரித்ததால் ரஜினி காந்த்தும், ஓமனாவும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர் என்று போலீசார் கூறினர்.
Average Rating