விளாத்திகுளம் அருகே பெட்ரோல் ஊற்றி பெண் எரித்துக்கொலை..!!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மீரான்பாளையம் தெருவைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவர் சென்னையில் பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரஷித் நிஷா (வயது 33). இவர் விளாத்திகுளம் தனியார் தொண்டு நிறுவனத்தில் களப்பணியாளராக வேலை செய்து வந்தார்.
இவர்களுக்கு ஹரி (16), நவீன் (13) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் அங்குள்ள பள்ளியில் பிளஸ்-1, 8-ம் வகுப்பு படித்து வருகின்றனர். வீட்டிலிருந்து வேலைக்கு அவர் மொபட்டில் சென்று வருவது வழக்கம். வழக்கம் போல நேற்று காலையில் குழந்தைகள் பள்ளிக்கூடத்துக்கு சென்ற பின் மொபட்டில் வேலைக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
இந்த நிலையில் நேற்று மாலையில் விளாத்திகுளம் அருகே சூரங்குடியில் இருந்து உச்சிநத்தம் செல்லும் சாலையின் ஓரமாக அவர் ஓட்டிச் சென்ற மொபட் நின்றுள்ளது. அருகிலுள்ள காட்டுப் பகுதியில் ரஷித் நிஷா உடலில் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
அங்கு அவரது உடலின் அருகில் கிடந்த 2 லிட்டர் கேனில் கால்வாசி அளவு பெட்ரோல் இருந்தது. அவருடைய உடலின் மேல் பகுதி மட்டும் தீயில் எரிந்து இருந்தது. அவரது கால்களில் தீக்காயம் இல்லை. அந்த வழியாக சென்றவர்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து சூரங்குடி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே விளாத்திகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு தர்மலிங்கம், போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார், சப்- இன்ஸ்பெக்டர் சொரிமுத்து அய்யனார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவருடைய உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரை கொலை செய்தவர்கள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கடைசியாக ரஷித் நிசா யாரிடம் போனில் பேசினார்? என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating