`என் மரணம் படம் பிடிக்கப்பட வேண்டும்’ முதலை வேட்டைக்காரரின் ஆசை நிறைவேறியது
முதலை வேட்டைக்காரர் என்று உலகம் முழுவதும் பிரியமுடன் அழைக்கப்பட்ட ஸ்டீவ் இர்வின் கடந்த திங்கட்கிழமை, விஷ மீனால் தாக்கப்பட்டு பலியான சம்பவம் அவருடைய ரசிகர்களை அதிர்ச்சியில் மூழ்க வைத்தது. இந்த மரணத்தில் இன்னொரு சோகமும் மறைந்துள்ளது. அதாவது கடந்த 2002-ம் ஆண்டு ஒரு டி.வி. நிகழ்ச்சிக்கு இரவின் பேட்டியளித்த போது நான் இறக்கும் போது அந்த காட்சி படம்பிடிக்கப்பட வேண்டும் என்பதே எனது ஆசை என்று குறிப்பிட்டு இருந்தார். அவர் விரும்பியது போலவே அவருடைய ஆசை எதிர்பாராதவிதமாக நிறைவேறிவிட்டது.
அவர் கடலுக்குள் படப்பிடிப்பு நடத்திக்கொண்டிருந்த நேரத்தில் ஸ்டிங்ரே விஷ மீன் அவருடைய மார்பில் தனது வாலை ஓங்கி அறைந்த காட்சியும், இர்வின் மிகுந்த வலியோடு அந்த மீனின் முள்ளை தன் நெஞ்சில் இருந்து பிடுங்கி எறிவதும், அடுத்த நிமிடமே அவர் மயங்கி சரிந்து பிணமாவதும் கேமராமேனின் வீடியோவில் தத்ரூபமாக பதிந்துள்ளது. விசாரணைக்காக அந்த வீடியோ டேப் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அந்த வீடியோ காட்சி இர்வினின் மானேஜரும், நெருங்கிய நண்பருமான ஜானுக்கு போட்டு காட்டப்பட்டது. அதை பார்த்துவிட்டு நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர், இர்வினின் மரணக்காட்சி நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது, அதை எந்த காரணத்தை முன்னிட்டும் பகிரங்கமாக ஒளிபரப்ப அனுமதிக்கக் கூடாது என்றார்.