சிறுமியை கற்பழித்த கடற்படை மாலுமிகளுக்கு கடுங்காவல் தண்டனை: ராணுவ நீதிமன்றம் தீர்ப்பு..!!
இந்திய கடற்படையின் மும்பை பிரிவில் பணியாற்றிய மாலுமிகள் இரண்டு பேர், கடந்த 2015-ம் ஆண்டு தங்களுக்கு தெரிந்த ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததுடன், தொடர்ந்து மிரட்டி தங்கள் ஆசைக்கு பணிய வைத்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு கடற்படை கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
விசாரணையில் இரண்டு மாலுமிகள் மீதான பாலியல் குற்றச்சாட்டு நிரூபணமானது. இதையடுத்து அவர்களில் ஒருவருக்கு 12 ஆண்டும், மற்றொருவருக்கு 15 ஆண்டும் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் கடற்படை பணியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். ஆனால், அவர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.
இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்ட தகவலின்படி, குற்றவாளிகளில் ஒருவர் அந்த சிறுமியுடன் தொடர்பு வைத்துள்ளார். பின்னர், 2014-ல் இருவரும் பிரிந்துள்ளனர். அத்துடன் அந்த சிறுமிக்கும் வேறு ஒருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. எனினும், குற்றவாளிகள் இருவரும் சேர்ந்து அந்த சிறுமியை தங்கள் ஆசைக்கு இணங்கும்படி மிரட்டி உள்ளனர். தங்கள் இஷ்டப்படி நடந்துகொள்ளாவிட்டால், வருங்கால கணவரிடம் கூறிவிடுவதாகவும் மிரட்டி அடிபணிய வைத்து தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
Average Rating