உள்ளாட்சி தேர்தல்: அ.தி.மு.க. கூட்டணியில் கார்த்திக் இணைகிறார்
தமிழக பார்வர்டு பிளாக் கட்சி தலைவரும், நடிகருமான கார்த்திக் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் எதிர் பார்த்த வெற்றியை பெறமுடிய வில்லை. எனவே, கட்சியை பலப்படுத்தும் முயற்சியில் தற்போது இறங்கி உள்ளனர். சமீபத்தில் நெல்லை மாவட்டம் நெல்கட்டும் செவலில் நடந்த புலித்தேவன் பிறந்த நாள் விழாவில் கார்த்திக் கலந்து கொண்டார்.
கார்த்திக் பேச வேண்டும் என்று தொண்டர்கள் குரல் எழுப்பியதை தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தின் போது நடந்த கல்வீச்சில் மதுரை ஆதீனம் காயம் அடைந்தார். ஆவேசம் அடைந்த தொண்டர்களை கார்த்திக சமாதானப்படுத்தினார்.
இந்த விழாவில் பங்கேற்க சென்ற கார்த்திக், அங்கு முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர்கள் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கும்படி அவரை வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
முக்கிய பிரதிநிதிகள் ஒருவர், “உங்களுக்கு குறிப்பிட்ட சமுதாயத்தில் நல்ல செல்வாக்கு இருக்கிறது. இதை நன்றாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்தால் எதிர்காலம் நன்றாக அமையும்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது.
பின்னர் முக்கிய பிரமுகர்களிடம் பேசிய கார்த்திக், `படிப்படியாக அ.தி.மு.க.வுடன் உறவை வலுப்படுத்திக் கொள்வேன். எதிர்காலத்தில் அ.தி.மு.க. வுடன் கூட்டணி அமைப்பேன்’ என்று உறுதி கூறினார் என்று அவரது நண்பர்கள் வட்டாரம் கூறுகிறது.
எனவே வருகிற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கார்த்திக் கூட்டணி அமைக்கலாம் என்று கூறப்படுகிறது. வருகிற 13-ந் தேதி கார்த்திக் பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்கப்பதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என்று அவரது நெருங் கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.