அதிமுக செயற்குழு உறுப்பினரானார் சசிகலா: நேரடியாக அரசியலில் குதிக்கிறார்
அதிமுகவின் செயற்குழு உறுப்பினராக தனது உடன் பிறவா சகோதரி சசிகலாவை ஜெயலலிதா நியமித்துள்ளார். இதன் மூலம் இதுவரை அதிமுகவையும் அதன் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவையும் மறைமுகமாக இயக்கி வந்த சசிகலா நேரடியாக அரசியலுக்கு வருகிறார்.
வரும் 12ம் தேதி சென்னையில் அதிமுக செயற்குழுக் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் நடக்கிறது. இந் நிலையில் சசியை செயற்குழு உறுப்பினராக்கும் அறிவிப்பை ஜெயலலிதா இன்று வெளியிட்டார்.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்து வரும் சசிகலா, ஜெயலிலதா எடுக்கும் முக்கிய அரசியல் முடிவுகளின் பின்னணியில் இருந்து வருகிறார். முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த சசிகலா போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதாவுடனேயே வசித்து வருகிறார்.
முதலில் சசியின் குடும்பத்தில் இருந்து நேரடியாக அரசியலுக்கு வந்தவர் அவரது அக்காள் மகனான தினகரன். முதலில் அவரை ராஜ்யசபா எம்பியாக்கிய ஜெயலலிதா, பின்னர் தேர்தலில் நிறுத்தி வெல்லச் செய்தார்.
இவரைத் தொடர்ந்து மாஜி வளர்ப்பு மகன் சுதாகரன் அரசியலுக்கு வர தீவிரகமாக முயன்றார். ஆனால், அவரை அதிமுகவை விட்டு நீக்கியதோடு, அவர் மீது கஞ்சா கேஸ் போட்டு உள்ளே போட்டார் ஜெயலலிதா. இப்போதும் போயஸ் தோட்டத்துக்குள் இவர் நுழைய ‘தடா’ தொடர்கிறது.
அதே போல சசிகலாவின் கணவர் நடராஜனும் ஒவ்வொரு தேர்தலின்போதும் சீட் வாங்க முயற்சித்து தோற்று வருகிறார். இவரையும் தோட்டத்துக்குள் நுழைய விடாமல் தூர வைத்துள்ளார் ஜெயலலிதா. ஆனாலும் அதிமுகவின் முக்கிய முடிவுகளை எடுப்பதில் சசி மூலமாக காய் நகர்த்தி வருகிறார் நடராஜன்.
சசிகலா நீண்டகாலமாகவே அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டவர் தான். சசி அரசியலுக்கு வர வேண்டும் என அவர் சார்ந்த முக்குலத்தோர் மக்கள் மத்தியில் ஆர்வம் இருந்து வந்தது. தென் மாவட்டங்களில் சசிகலாவை வருங்கால முதல்வர் என்று புகழ்ந்து போஸ்டர்கள் ஒட்டப்படுவது வழக்கம்.
ஆனால், ஜெயலலிதாவின் நிழலாகவே இதுவரை இருந்து வந்தார் சசிகலா. இப்போது நேரடியாக அரசியலுக்கு வந்துள்ளார். எம்ஜிஆர் காலத்தில் இருந்தே அதிமுகவின் ஓட்டு வங்கியாக திகழ்ந்து வந்த மூக்குலத்தோர் சமூகத்தின் வாக்குகளை எம்ஜிஆரின் மறைவுக்குப் பின்னர் ஜெயலலிதா பக்கமாக திருப்பிவிட்டதில் முக்கிய பங்காற்றி வருபவர் சசிகலா.
ஜெயலலிதாவுக்கு இணையாக பல வழக்குகள சசிகலா மீதும் உள்ளன. வருமானத்தை மீறி சொத்து குவித்தது தொடர்பான வழக்கு பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஜெயலலிதாவோடு ஜெயிலுக்கும் போய் வந்துள்ளார். ஜெயலலிதாவின் அனைத்து கஷ்ட, நஷ்டங்களிலும் பங்கெடுத்தவர்.
செய்தித்துறையில் ஒரு பிஆர்ஓவாக இருந்த நடராஜனின் மனைவியான சசிகலா, எம்ஜிஆர் காலத்தில் வீடியோ கேசட் வாடகைக்கு விடும் கடை நடத்தி வந்தார். வீடியோ கேசட்டுகளை ஜெயலலிதாவுக்கு கொடுக்கப் போனபோது ஏற்பட்ட பழக்கத்தில் அவருக்கு நெருக்கமானார்.
இப்போது அதிமுக செயற்குழு உறுப்பினராகியுள்ளார். வருங்காலத்தில் அதிமுகவில் மிக முக்கியமான இடத்தைக் கூட சசிகலா பிடிக்கலாம். சசியை தவிர மேலும் 44 பெண்கள் தலைமை செயற்குழு உறுப்பினர்களாக நியமித்துள்ளார் ஜெயலலிதா.
அவர்களது விவரம்: செல்வி ராமஜெயம், வளர்மதி ஜெயராஜ், பா.வளர்மதி, சக்தி கோதண்டம், சாந்தா ஜெயபால், சரஸ்வதி ரெங்கசாமி, லட்சுமி முத்து, சூர்யகலா, வனரோஜா, தமிழ்மொழி ராஜதத்தன்,
சுந்தராம்பாள், சாந்தா சண்முகராஜன், சாவித்திரி தேவி, கண்ணம்மா, கோகிலம், ராஜாத்தி, ராஜேஸ்வர், பானுமதி, பாண்டியம்மாள் தேவி, குமுதா பெருமாள், குருத்தாய் என்ற விண்ணரசி, பாரதி சாம்சன், கங்கா, விஜயலட்சுமி, மலர்விழி, கண்ணகி, விக்டோரியா மேரி, குமாரத்தாய், ஸ்டார் மேரி, சாவித்திரி, ராதிகா
அமுதா, லட்சுமி வெங்கடேசன், முனியம்மாள், மீனாட்சி, காத்த மூர்த்தி, பஞ்சம்மாள், அமுதா சீனிவாசன், இந்திரா முனுசாமி, நசீமா, கீதாராணி, இம்ராஹிமா, விமலா, சுமதி ஆகியோர்