குடைபிடித்தபடி ரயில் எஞ்ஜினை இயக்கும் டிரைவர்..!! (வீடியோ)
மழை பெய்து கொண்டிருக்கும்போது குடையுடன் ரயில் எஞ்ஜினை ஓட்டுநர் இயக்குவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
அதில், குடையைப் பிடித்தபடி ரயில் எஞ்ஜினை ஓட்டுநர் இயக்க, மழையால் ஏற்பட்ட ஈரத்தைப் போக்க தரை முழுவதும் செய்தித்தாள்கள் பரப்பப்பட்டுள்ளதும் பதிவாகியுள்ளது.
வீடியோவின் பின்னணியில் பேசுபவர், மழைக்காலங்களில் தொடர்ச்சியாக இதுபோன்ற பிரச்னைகளை எதிர்கொண்டு வருவதாகவும், இதுதொடர்பாக அதிகாரிகளிடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் பேசுகிறார்.
ட்விட்டரில் அந்த வீடியோவை மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கு டேக் செய்து நெட்டிசன் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாருக்கு ரயில்வே துறை சார்பில் அளிக்கப்பட்ட பதிலில், அந்த ரயில் எஞ்சின் பயன்பாட்டில் இல்லாத எஞ்சின்.
அதை மற்றொரு எஞ்ஜின் இழுத்துச் செல்வது போன்ற காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றிருப்பதை நீங்கள் காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வீடியோ ஜார்க்கண்ட் மாநிலம் பெர்னோ ரயில் நிலையம் அருகில் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.
Average Rating