தலையில் தாங்க முடியாத பொடுகு தொல்லையா? கவலை வேண்டாம்..!!
ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வு, நோய் எதிர்ப்புத் தன்மையின் மாறுபாடு, அதீத மன உளைச்சல், தட்பவெப்பநிலை மாறுபாடு, முகப்பரு, எண்ணெய்ப் பசை அதிகம் உள்ள தோல், தலையைச் சுத்தமில்லாமல் வைத்துக் கொள்ளுதல், அதிக உடல் பருமன் போன்றவை தலையில் பொடுகு வருவதற்கு காரணமாகின்றன.
தோல் வறண்டு போவதால் அழற்சி ஏற்பட்டு வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தில் பொடுகு உருவாகி உதிரும்.
தலை, முகம், காது போன்ற பகுதிகளில் இது காணப்படும், குழந்தைகளுக்கு வந்தால் இதை Cradle Cap என்று சொல்வார்கள்.
கீழ்க்கண்ட கைமுறைகளைப் பயன்படுத்திப் பொடுகு தொல்லையை மாற்றலாம்.
வெந்தயத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்தால், உஷ்ணம் குறைந்து பொடுகுத் தொல்லை தீரும்.
மிளகுத் தூளுடன் பால் சேர்த்துத் தலையில் தேய்த்துச் சில நிமிடங்கள் ஊறிய பின் குளிக்க வேண்டும்.
தேங்காய் எண்ணெயில் வெந்தயத்தை சேர்த்துக் காய்ச்சித் தலையில் தேய்த்து குளிக்கலாம்.
பாசிப்பயறு மாவு, தயிர் கலந்து தலையில் ஊறவைத்துப் பின்னர் குளிக்க வேண்டும்.
கற்றாழைச் சாற்றைத் தலையின் மேல் பகுதியில் நன்கு படும்படி தேய்த்து ஊறவைத்து, சிறிது நேரம் கழித்துக் குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.
தலையில் சிறிதளவு தயிர் தேய்த்துச் சில நிமிடங்கள் கழித்துச் சீயக்காய் தேய்த்துக் குளிக்கலாம்.
வேப்பிலைக் கொழுந்து, துளசி ஆகியவற்றை மையாக அரைத்துத் தலையில் தேய்த்துச் சிறிது நேரம் கழித்துக் குளிக்க வேண்டும்.
துளசி, கருவேப்பிலையை அரைத்து எலுமிச்சை பழச்சாற்றுடன் கலந்து தலையில் சிறிது நேரம் ஊறவைத்துப் பிறகு குளிப்பது நல்லது.
வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து, சிறிதளவு தயிர், எலுமிச்சைச் சாறு கலந்து தலையில் தேய்க்க வேண்டும்.
நெல்லிக்காய் தூள், வெந்தயப் பொடி, தயிர், கடலைமாவு கலந்து தலையில் தேய்த்து, சிறிதுநேரம் கழித்துக் குளிக்க வேண்டும், வாரம் ஒருமுறை இவ்வாறு செய்வது நல்லது.
பசலை கீரையை அரைத்துத் தலையில் தேய்த்துக் குளிக்கலாம்.
அருகம்புல் சாறு எடுத்து தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து நன்றாகக் காய்ச்சிப் பின்பு ஆறவைத்துத் தலையில் தேய்க்கலாம்.
Average Rating