விபத்தில் சிக்கிய நோயாளியின் கண்ணத்தில் அடித்த டாக்டர்..!!
நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த நோயாளியை டாக்டர் ஒருவர் அடித்ததாக புகார் எழுந்துள்ளது.நெல்லை மாவட்டம், ஆலங்குளத்தைச் சேர்ந்த வியாபாரி ஒருவர், தனது வியாபாரம் தொடர்பாக நெல்லைக்கு வந்து விட்டு சொந்த ஊருக்கு பைக்கில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த லாரி அவரது பைக் மீது மோதியது. இதில், உடல் முழுவதும் காயம் அடைந்த அவர் ஆம்புலன்ஸ் மூலமாக அவர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்.
அப்போது பணியில் இருந்த டாக்டர் அவரைப் பாரத்ததும், குடித்து விட்டு பைக்கில் இருந்து கீழே விழுந்து விட்டார் என நினைத்துக் கொண்டார். அதனால் அவருக்கு சிகிச்சை அளிப்பதற்கு முன்பாக குடித்திருப்பதை உறுதி செய்து கொள்வதற்காக ஊதுமாறு சொல்லி உள்ளார். ஆனால், நோயாளி ஊத மறுத்ததுடன், தான் குடிக்கவில்லை எனத் தெரிவித்து உள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக நோயாளிக்கும் டாக்டருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.
இதில் ஆத்திரம் அடைந்த டாக்டர் அந்த நோயாளியை கன்னத்தில் அடித்து விட்டார். அதற்குள்ளாக விபத்து குறித்து அறிந்த நோயாளியின் உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் உள்ளே வரும்போது, டாக்டர் அந்த நோயாளியை கன்னத்தில் அடித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த நோயாளியின் உறவினர்கள் டாக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விபத்தில் சிக்கியவருக்கு குடிப்பழக்கமே கிடையாது என்பதை உறவினர்கள் தெரிவித்தனர்.
இதனால் தனது தவறை உணர்ந்த மருத்துவர், அந்த நோயாளியிடமும் அவரது உறவினர்களிடமும் மன்னிப்புக் கேட்டதுடன் உடனடியாக அவருக்கு உரிய சிகிச்சையும் அளித்தார். அத்துடன், இரு தரப்பினருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டதால் இந்த விவகாரம் தொடர்பாக யாரும் காவல்நிலையத்தில் புகார் செய்யவில்லை
Average Rating