குழந்தைக்கு பெயர் சூட்டிய விவகாரம்: காதல் மனைவியை கொலை செய்த கணவன் கைது..!!
கோவை போத்தனூர் நூராபாத் பகுதியை சேர்ந்தவர் முரளி(வயது 30). தொழிலாளி.
இவரது மனைவி எட்வினா வானமாதேவி (25). காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
நேற்று வீட்டில் எட்வினா வானமாதேவி மயங்கி விழுந்து விட்டதாக கூறி முரளி அவரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவரது உடலில் காயங்கள் இருந்தது.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் முரளியிடம் விசாரித்த போது முன்னுக்குப்பின் முரணாக பேசினார். அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது அவர் மனைவியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து முரளியை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-
நானும், எனது மனைவியும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள். நாங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு கடந்த 35 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு பெயர் வைப்பதில் எனக்கும், மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனது பேச்சை கேட்காமல் எனது மனைவி குழந்தைக்கு ரியா என பெயர் சூட்டினார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
சம்பவத்தன்று நான் குடி போதையில் வீட்டுக்கு சென்று தகராறு செய்து அவரை அடித்து உதைத்தேன். இதில் அவர் மயங்கி விழுந்தார். சிறிது நேரத்தில் எழுந்து விடுவார் என நினைத்து நானும் படுத்து தூங்கி விட்டேன்.
காலையில் கண் விழித்த போதும் எனது மனைவி படுத்து கிடந்தார். அவரை நான் எழுப்ப முயன்ற போது அவர் இறந்து விட்டது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நான் கொலையை மறைப்பதற்காக எட்வினா வானமாதேவி தற்கொலை செய்து கொண்டது போல வெளியில் காட்டுவதற்கு திட்டமிட்டேன்.
தொட்டிலில் இருந்து துணியை எடுத்து மேற்கூரையில் மாட்டி எட்வினா வானமா தேவி தற்கொலை செய்து கொண்டதாக அலறித் துடித்தேன். எனது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு வந்தனர். உடனே மனைவியை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வது போல நடித்தேன். ஆனால் மனைவியின் உடலில் காயங்கள் இருந்ததால் நான் மாட்டிக் கொண்டேன்.
இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
Average Rating