கருக்கலைப்பு-ஓரின சேர்க்கை திருமணத்துக்கு போப் ஆண்டவர் எதிர்ப்பு
கருக்கலைப்பு மற்றும் ஓரின சேர்க்கை திருமணத்துக்கு சில நாடுகள் அங்கீகாரம் அளித்து வருகின்றன. கனடா நாட்டில் ஓரின சேர்க்கை திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்கப்பட்டது. ஆனால் அது இன்னும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை. இந்த ஆண்டு இறுதியில் ஓட்டெடுப்பு நடைபெற இருக்கிறது. இது போன்ற செயல்களுக்கு போப் ஆண்டவர் பெனடிக் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்.
இந்த நிலையில் கனடாநாட்டை சேர்ந்த கிறிஸ்தவ பிஷப்புகள் வாடிகன்நகரில் போப் ஆண்டவரை சந்தித்து பேசினார்கள். அப்போது அவர்கள் மத்தியில் பேசிய போப் மீண்டும் கருக்கலைப்பு, ஓரின சேர்க்கை திருமணத்துக்கு எதிரான கருத்தை வெளியிட்டார். அவர் கூறியதாவது:-
சுதந்திரம், சகிப்புத்தன்மை என்ற பெயரில் இயற்கைக்கு மாறான செயல்களுக்கு ஊக்கம் அளிக்கக்கூடாது. கருக்கலைப்பு என்பது கருவிலேயே குழந்தையை கொல்லும் பாவச் செயல். ஓரின சேர்க்கை திருமணங்களுக்கும், கருக்கலைப்புக்கும் அங்கீகாரம் அளிக்கப்படுவதை கத்தோலிக்க பிஷப்புகள் கடுமையாக எதிர்க்க வேண்டும். கிறிஸ்தவ மத நம்பிக்கையை கொஞ்சமும் விட்டு கொடுக்க கூடாது. இவ்வாறு போப் ஆண்டவர் கூறினார்.