முத்தக் காட்சிகளுக்கு இனிமேல் ‘சென்சார்’ கிடையாது
இந்திய திரைப்படங்களில் முத்தக்காட்சிகளுக்கு இனிமேல் தடை கிடையாது என மத்திய தணிக்கை வாரிய குழு தலைவர் ஷர்மிளா தாகூர் கூறியுள்ளார். இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், திரைப்படங்களில் தணிக்கை முறையில் மாற்றங்கள் கொண்டு வர அரசுக்குப் பரிந்துரைத்துள்ளோம். அதன்படி, வயது வந்தோருக்கான படங்களில் சில நேரங்களில் அதிக அளவிலான காட்சிகள், வசனங்களை வெட்டச் சொல்வதற்குப் பதில், அப்படங்களுக்கு எக்ஸ் அல்லது ஏ பிளஸ் என்ற சான்றிதழ்களை கொடுக்கலாம் என அரசுக்குப் பரிந்துரைத்துள்ளோம்.
பல காட்சிகளை வெட்டுவதற்குப் பதில் அப்படத்தை அப்படியே திரையிட அனுமதிக்கலாம் என்ற எண்ணத்தில் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் இந்தப் படங்களை கண்டிப்பாக வயது வந்தோர் மட்டுமே பார்க்க முடியும்.
இதேபோல முத்தக்காட்சிகளுக்கு தடை சொல்ல வேண்டாம் என தணிக்கை வாரியம் முடிவு செய்துள்ளது. இனி மேலும்¬முத்தக்காட்சிகளை ஆபாசம் என்று கருத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதேசமயம், ஆபாசப் படங்களுக்கு (போர்னோ கிராபி) அனுமதி தருவதில்லை என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான காலம் இன்னும் இந்திய சமுதாயத்தில் வரவில்லை. அதற்கு பெரிய அளவில் விவாதம் நடத்தப்பட்டு அதன பின்னரே முடிவெடுக்க முடியும் என்றார் தாகூர்.