விஜய் மில்டன் எனக்கு அடையாளம் கொடுத்தார்: சுபிக்ஷா..!!
‘அன்னக்கொடி’ படம் மூலம் பாரதிராஜாவால் தமிழில் அறிமுகமானவர் சுபிக்ஷா. பின்னர் மலையாளப் படங்களில் நடித்தார். விஜய் மில்டன் இயக்கிய ‘கடுகு’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். இப்போது ‘நேத்ரா’, ‘கோலிசோடா-2’, ‘வேட்டைநாய்’, ‘சீமத்தண்ணி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
“‘நேத்ரா’ ஆக்ஷன் திரில்லர் படம். இதில் ‘டைட்டில்’ வேடத்தில் நடித்திருக்கிறேன். ‘வேட்டைநாய்’ படத்தில் ஆர்.கே.சுரேஷ் ஜோடியாக அவரது மனைவி வேடத்தில் நடிக்கிறேன். இது மிகவும் அழுத்தமான பாத்திரம். ‘சீமத்தண்ணி’ படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.
இயக்குனர் விஜய்மில்டனின் ‘கோலிசோடா-2’ படத்தில் நல்ல வேடம் கிடைத்திருக்கிறது. அவர் இயக்கிய ‘கடுகு’ படத்தில் நான் சிறப்பாக நடித்ததாக கூறினார். ‘கோலிசோடா-2’ படம் தொடங்கியதும் இதில் எனக்கு ஒரு கல்லூரி மாணவி வேடம் இருப்பதாக சொன்னார். அவரிடம் கதைகூட கேட்கவில்லை. உடனே நடிக்க ஒப்புக்கொண்டேன். ஏன் என்றால் எனக்கு ‘கடுகு’ படம் மூலம் நல்ல அடையாளம் கொடுத்தவர் மில்டன் தான்.
எல்லோரும் என்னை ‘கடுகு’ சுபிக்ஷா என்று தான் சொல்கிறார்கள். அந்த அளவுக்கு என்னைப்பற்றி பேச வைத்தவர், அவர் தான். ‘கோலிசோடா-2’ லும் பேசப்படும் வேடம் தான். ‘கடுகு’ படத்தில் நடித்த பரத்சீனி இதில் நடிக்கிறார். அவருடைய ஜோடியாக நான் நடிக்கிறேன். இந்த படங்கள் அடுத்தடுத்து வரும் போது நானும் தமிழ் பட உலகில் பேசப்படும் நடிகையாகி விடுவேன்” என்றார்.
Average Rating