சூர்யா-ஜோதிகா திருமணம் நடந்தது
நடிகர் சூர்யாநடிகை ஜோதிகா திருமணம் இன்று சென்னையில் நடந்தது. அடையாறு பார்க் ஷெரட்டன் ஹோட்டலில் இன்று காலை வேத மந்திரங்கள் ஓத சம்பிரதாய முறைப்படி திருமணம் நடந்தது. இதற்காக இந்த ஹோட்டலில் உள்ள மௌபரி ஹாலில் விஷேசமாக திருமண மேடை அமைக்கப்பட்டிருந்தது.சூர்யாவின் தந்தை சிவக்குமார்அவரது மனைவி லட்சுமி ஆகியோர் குத்து விளக்கை ஏற்றி வைக்க, மண மேடைக்கு வந்த சூர்யா பெற்றோர் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றார்.
ஜோதிகாவை அவரது சகோதரியும் நடிகையுமான நக்மா மேடைக்கு அழைத்து வந்தார். வெட்கத்தில் தலை குனிந்தபடி ஜோதிகா தனது பெற்றோரின் காலிலி விழுந்து வணங்கினார்.
இதையடுத்து தாலியை தட்டில் வைத்து எடுத்துச் சென்ற சிவக்குமார் முதல் வரிசையில் அமர்ந்திருந்த முதல்வர் கருணாநிதி உள்ளிட்டவர்களிடம் ஆசி வாங்கினார். காலை 7 மணிக்கு ஜோதிகாவுக்கு சூர்யா தாலி கட்டினார்.
இதைத் தொடர்ந்து கருணாநிதியின் காலில் விழுந்து சூர்யாஜோதிகா ஜோடி ஆசி பெற்றனர். இருவருக்கும் பூங்கொத்து கொடுத்து வாழ்த்திய கருணாநிதி, சூர்யாவின் கையை முத்தமிட்டு அவரது கன்னத்தை தட்டிக் கொடுத்தார்.
இதையடுத்து ஜோதிகாவும் சூர்யாவும் மாலை மாற்றிக் கொண்டனர். பின்னர் இருவரின் உறவினர்களும் மணமக்களை வாழ்த்தினர். இதைத் தொடர்ந்து இளையராஜா, கமல், சத்யராஜ், அஜீத், பிரபு, சரத்குமார், ராதிகா, மனோரமா, சத்யராஜ் உள்ளிட்டோர் புதுமணத் தம்பதியை வாழ்த்தினர்.
மத்திய அமைச்சர்கள் தயாநிதி மாறன், வாசன், இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு உள்ளிட்டவர்களும் வந்திருந்தனர். இத்திருமணத்தையொட்டி ஹோட்டலில் மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அழைப்பிதழ் வைத்திருந்தவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.