யாழ்ப்பாணம் அருகே மீண்டும் கடும் போர்…
இலங்கையில் யாழ்ப்பாணம் அருகே மீண்டும் கடும் போர் நடைபெறுகிறது. இந்த போரில் 180 விடுதலைப்புலிகளை கொன்றுவிட்டதாக இலங்கை ராணுவம் கூறியது. யாழ்ப்பாணத்தில் உள்ள ராணுவ தளத்தை கைப்பற்ற விடுதலைப்புலிகள் கடும் தாக்குதலை மேற்கொண்டனர். அப்போது ராணுவத்தினர் விமானத்தில் பறந்து சென்று விடுதலைப்புலிகளின் முகாம்கள் மீது சரமாரியாக குண்டுவீசி தாக்கினார்கள். இதனால் அந்த பகுதியில் கடும் சண்டை நடந்துவருகிறது.
180 பேர் பலி
நேற்று முன் தினம் தொடங்கிய அந்த சண்டை தொடர்ந்து நீடித்துவருகிறது. இந்த போரில் 180 விடுதலைப்புலிகளை கொன்றுவிட்டதாக இலங்கை ராணுவம் கூறியது. தங்கள் தரப்பில் 28 பேர் பலியானார்கள் என்றும் 125 பேர் காயம் அடைந்தனர் என்றும் ராணுவத்தினர் கூறினார்கள். ஆனால் இந்த தகவலை விடுதலைப்புலிகள் உறுதிப்படுத்தவில்லை.
தவிப்பு
இப்போது நடைபெறும் இந்த போர் காரணமாக யாழ்ப்பாணத்துக்கு செல்ல இருந்த ஒரே பாதையும் துண்டிக்கப்பட்டுவிட்டது. அங்கு 8 ஆயிரத்துக்கும் மேலான பொது மக்களும் ஏராளமான வெளிநாட்டு பயணிகளும் வெளியேற வழி இல்லாமல் தவித்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை அனுப்புவதிலும் தடை ஏற்பட்டு இருக்கிறது.