இங்கிலாந்தில் பதவிச்சண்டை தொடங்கியது – நிதிமந்திரி பிரவுன் பிரதமராக 10 மந்திரிகள் எதிர்ப்பு
இங்கிலாந்து பிரதமர் டோனிபிளேர் விரைவில் பதவி விலக இருக்கும் நிலையில் அவருக்கு பதிலாக புதிய பிரதமராக யார் வருவது என்பது குறித்து உட்கட்சிசண்டை தொடங்கி விட்டது. பிளேர் மந்திரி சபையில் மந்திரிகளாக இருக்கும் 10 பேர் நிதிமந்திரி கார்டன் பிரவுன் பிரதமராவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
மந்திரிகள் போர்க்கொடி
இங்கிலாந்து நாட்டில் தொழிற்கட்சி தான் கடந்த 3 தேர்தல்களாக வெற்றி பெற்று ஆட்சிஅமைத்து வந்து இருக்கிறது. இந்த 3 முறையும் டோனி பிளேர் தான் பிரதமர் ஆனார். அவரது பதவிக்காலம் 2009-ந் தேதி முடிகிறது. இதற்கிடையில் ஈராக்போர், லெபனான் தாக்குதல் ஆகியவை காரணமாக அவரது செல்வாக்கு சரிந்து விட்டது.
அதோடு பதவி விலகவேண்டும் என்று கோரி அவருடைய கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு வலுத்து வருகிறது. அவரது மந்திரி சபையில் உள்ள 7 மந்திரிகள் பதவியை ராஜினாமா செய்தனர். இதன் காரணமாக அவர் ஒருசில மாதங்களில் பதவி விலக தீர்மானித்து இருக்கிறார்.
இந்த நிலையில் அவர் பதவி விலகினால் நிதி மந்திரி கார்டன் பிரவுன் புதிய பிரதமர் ஆவார் என்று கருதப்பட்டு வந்தது. அவர் பிரதமர் ஆவதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. 10 மந்திரிகள் அவர் பிரதமர் ஆவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். பிரவுன் பிரதமராக, டோனிபிளேர் ஆதரவு தரமாட்டார் என்றும் கூறப்படுகிறது. பிரவுன் இல்லாத வேறு ஒருவர் நிறுத்தப்படவேண்டும் என்று அந்த 10 மந்திரிகளும் வலியுறுத்தி உள்ளனர்.
தூண்டுதல்
பிளேர் பதவி விலகக்கோரி மந்திரி பதவியை முதலில் ராஜினாமா செய்த டாம் வாட்சனை அவரது வீட்டில் பிரவுன் சந்தித்து பேசினார். இதைத்தொடர்ந்து இவர்தான் பிளேருக்கு எதிரான கிளர்ச்சியை தூண்டிவிட்டார் என்ற சந்தேகம் வலுவடைந்து உள்ளது.
பிரவுனின் நெருங்கிய நண்பரான அரசியல் சட்டதுறை மந்திரி ஹார்மன் பிரதமர் பிளேருக்கு எதிராக அறிக்கை வெளியிட்டார். அதில் பிளேரின் வெளிநாட்டுக் கொள்கை தோல்வி அடைந்து விட்டது என்று குறிப்பிட்டார்.
இதற்கிடையில் பிளேர் தன் மந்திரிகள் மற்றும் ஆதரவாளர்கள் வீடுகளுக்கு டெலிபோன் செய்து கொஞ்சகாலத்துக்கு பொறுமையாக இருக்கும்படி கேட்டுக்கொண்டார்.